சலிப்பு தரும் நெல் விவசாயம்?

தொடர்ந்து நெல் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு, தமிழக நெல் விவசாயிகளிடையே ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவும் நெல் உற்பத்தியும், நெல் விவசாயத்துக்கான ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற நெல் விவசாயிகளுக்கு அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2010-11-ம் ஆண்டில் 21.5 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு 20.71 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. 81.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு 71.5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப் பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சம்பா உள்ளிட்ட அனைத்து பருவங்களிலும் 3.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது.  தமிழகத்தின் மிகப்பெரிய சாகுபடியான சம்பா நெல் சாகுபடிப் பணிகள், தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 16 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா பாசன நெல் சாகுடி பெரும்பாலும், கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவையும், கர்நாடக அரசின் பெருந்தன்மையின் அளவையும் பொறுத்ததாக மாறியிருக்கிறது.

நெல் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நியாயமான விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்து.

அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை என்பது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.இதனால் விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறை, விவசாயத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்த போதிலும் மக்களுக்குத் தேவையான அரிசி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்துவிடுவதால், உற்பத்திக் குறைவு பற்றி அரசு, அதிகம் சிந்திக்கும் நிலையில் இல்லை.

ஆனால் நெல் விவசாயிகளுக்கோ, இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை. டெல்டா பாசனப் பகுதிகளில் நெல்லை விட்டால் வேறு பயிர்களை பயிரிட முடியாத நிலை. இதனால் எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்பட்டாலும், ஆள் பற்றாக் குறை என்றாலும் விவசாயம் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், நெல் விவசாயிகளை பெரிதும் சலிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

சம்பா அறுவடை காலத்தில் நெல் விலை, நல்ல தரமான காய்ந்த நிலையில் அரசு நிர்ணய விலையான ரூ. 1100-ஐ விட, சற்றும் உயரவில்லை.

மாறாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொஞ்சம் ஈரப்பதம், கொஞ்சம் தரம் குறைவான நெல் குண்டால் ரூ. 600-க்கும் ரூ. 700-க்கும் அடிமாட்டு விலைக்கு தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப் பட்டது.

சம்பா அறுவடை காலத்தில் பொன்னி புழுங்கல் அரிசி, கிலோ ரூ. 24 முதல் ரூ. 28 வரை இருந்தது, தற்போது ரூ. 28 முதல் ரூ. 32 வரை என உயர்ந்து இருக்கிறது.ஆனால் நெல்விலை இன்னமும் அடிமட்டத்திலேயே உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.

6 மாத சம்பா நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15 ஆயிரம். அதில் இருந்து கிடைக்கும் நெல்லின் விலை ரூ. 18 ஆயிரம். ஒரு ஏக்கர் நிலம் வைத்து இருக்கும் நெல் விவசாயிக்கு 6 மாதத்துக்கு ரூ. 3 ஆயிரம்தான் வருமானம் வருகிறது என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.வி. கண்ணன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் கருவிகளுக்குப் பயன்படும் டீசல் விலை 300 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்துகள் விலை 150 சதவீதமும், தொழிலாளர்களின் ஊதியம் 200 சதவீதமும், உரத்தின் விலை 45 சதவீதமும் உயர்ந்து இருக்கும் நிலையில், நெல் விலை 35 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் எப்படி நெல் விவசாயம் செய்ய முடியும் என்று சலிப்புதான் ஏற்படுகிறது. 100 நாள் வேலைத்திட்டம் வேளாண்மையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.எனவே கேரளா, கர்நாடகா மாநிலங்களைப் போல் தமிழகத்திலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களை, வேளாண் பணிகளுக்குத் திருப்ப வேண்டும்.அரசு வழங்கும் கூலி போக மீதியை விவசாயிகள் வழங்குவர்.

வெட்டிய ஏரியை, வாய்க்காலை மீண்டும் மீண்டும் வெட்டிப் பயனில்லை’ என்றார் அவர்.

மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி. ரவீந்திரன் கூறுகையில், “பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நெல் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும். பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியும் இழப்பீடு பெறும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் சென்றுவர சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *