சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
நாற்றங்கால் தயாரிப்பு:

  • ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும்.
  • மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை பாத்திகளின் மேல் தூவ வேண்டும்.
  • விதைகளை அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்துடன் ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • பின் மேட்டுப்பாத்திகளில் 3 செ.மீ. இடைவெளியில் 2 செ.மீ. ஆழத்தில் கோடுகள் இழுத்து, அதில் விதைகளை வரிசையாக விதைத்து வைக்கோல் கொண்டு மூடி, பின் பூ வாளி கொண்டு காலை, மாலை இரு வேளையும் நீரைப்பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.
  • விதைத்த 8-10 நாட்களில் விதை முளைத்தவுடன் புல் போர்வையை நீக்கி 40-45 நாட்கள் வரை பராமரித்து, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் (ரோகார்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு:

  • புழுதிபட உழுது, ஒரு ஏக்கருக்கு 2 மூடை டி.ஏ.பி., 10 டன் மக்கிய தொழு உரம், கடைசி உழவில் களை பறித்து, 10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • நட்டவுடனும் பின் 5 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • பெண்டிமெத்திலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி என்ற அளவில் நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தெளிக்க வேண்டும்.
  • ஒரு மாத இடைவெளியில் பின்னர் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.
  • மேலுரமாக ஒரு மூடை யூரியா, 2 மூடை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவுசெய்த 30வது நாளில் களை எடுத்தபின் இடவேண்டும்.
  • 60வது நாள் மீண்டும் ஒரு முறை களை எடுத்து, ஒரு மூடை யூரியா, 2 மூடை பொட்டாஷ் இடவேண்டும்.
  • வெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நடவிலிருந்து அறுவடை வரை 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

அறுவடை:

  • அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.
  • பயிரின் 75 சதவீதம் இலைகள் வாடியவுடன் வெங்காயத்தை தோண்டி எடுக்கலாம்.
  • பயிர் நடவு செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

ஏக்கருக்கு 7 டன் வெங்காயம் விளைச்சல் எடுத்துள்ளார் அனுபவ விவசாயி, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜா. (தகவல்: பெ.ச.கவிதா, ம.அ.வெண்ணிலா, செ.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம். 09047065335)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *