தினமலர் சார்பில் மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான மாடி தோட்டம் அமைப்பது குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.வாப்ஸ் நிறுவன சி.ஓ.ஓ. சோமேஷ்பாபு, தொழில்நுட்ப ஆலோசகர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்றுனர் நடராஜன் கூறியதாவது:
- கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய் விதைகள் சிறிதாக இருப்பதால் அவற்றை குழித்தட்டு டிரேயில் வளர்க்க வேண்டும்.
- குழிகளில் தேங்காய்நார் துகள்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி லேசாக விரலால் அழுத்திய இடத்தில் விதைகளை துாவி மேலாக தேங்காய் நார் துகள்களால் மூட வேண்டும். இப்படி 30 நாட்கள் டிரேயில் நாற்றுகளாக வளர்த்து, பெரிய பைகளுக்கு மாற்ற வேண்டும்.
- மற்ற விதைகளை மண் பைகளில் நேரடியாக துாவி செடியாக வளர்க்கலாம். வசதியிருந்தால் பசுமை குடில் அமைக்கலாம். நஞ்சில்லா உணவுகளை வீட்டில் உற்பத்தி செய்யலாம் என்றார்.
சொட்டுநீர் பாசன பயிற்றுனர் செந்தில்குமார் கூறியதாவது:
- காய்கறி செடிகள் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை பலன் கொடுக்கும். அதன்பின் பைகளில் உள்ள மண்ணை மாற்றி வேறு விதைகளை நடவேண்டும்.
- மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது மாடியில் தேங்கக்கூடாது.
- சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும்.
- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும்.
- மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது.
- சற்றே பெரிய டிரம்களில் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்களை நடலாம். இலைகளை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம்.
- தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்களில் லாபம் பார்க்கலாம்.
- கத்தரி, வெண்டை, தக்காளி, செடி அவரை, பீட்ரூட், முள்ளங்கி செடிகளை மாடியில் வளர்க்கலாம், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்