மதுரை பார்வை!

மதுரையின் முதன்மை அடையாளமான வைகையில் தண்ணீர் ஓடியது ஒரு காலம். அதை மீட்கும் பெருமுயற்சியில், தன் பங்கை முன்னெடுத்து வைத்துள்ளது ‘பார்வை’ அமைப்பு.

மதுரையைப் பசுமை நகரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது “பார்வை” அறக்கட்டளை. மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் முதுகெலும்பாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன். பொறியாளரான இவர் தொடங்கிய பார்வை அறக்கட்டளை மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், சிட்டம்பட்டி, வில்லூர் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்கள், நகரில் உள்ள வைகை ஆற்றின் கரை, சாலையோரம் எனப் பல்வேறு இடங்களிலும் 30,000 மரக்கன்றுகளை ஏற்கெனவே நட்டுள்ளது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

தாகம் தணிப்பு

கடந்த சில ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் மதுரையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதைத் தவிர்க்கும் முயற்சியில்தான் மதுரை மாவட்டத்தைப் பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்வை அறக்கட்டளை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 8 பேர் இணைந்து செயல்படுகின்றனர்.

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடுவதற்குக் கடந்த ஆண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே போதிய தண்ணீர் வசதி இல்லாததால், இந்த அமைப்பே ஆழ்குழாய் அமைத்துக் கொடுத்துள்ளது. தற்போது மரங்களுக்கு மட்டுமின்றி மாணவர்களும் அந்தத் தண்ணீரால் பயன்பெற்று வருகின்றனர்.

மாணவர்களைத் தேடி

“மாணவர்கள்தான் நம் எதிர்காலத் தலைமுறை, அவர்களிடம் வலியுறுத்தப்படும் விஷயம் நீண்ட காலம் மனதில் நிற்கும். அதனால் மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரக்கன்று நடுவதற்கும் பள்ளிகளையே முதன்மையாகத் தேர்வு செய்கிறோம்.

பள்ளிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், உதவியாகவும் இருக்கின்றனர். இதுவரை மதுரை மாவட்டத்தில் உள்ள 298 பள்ளிகளில்  மரக்கன்றுகள் நட்டுள்ளோம்” என்கிறார் குபேந்திரன்.

வீட்டுக்கு ஒரு மரம் என்ற நோக்கத்துடன் கிராம மக்களுக்கும் மரக்கன்றுகள் கொடுத்து, மரங்கள் வளர்ப்பதன் அவசியம், பராமரிக்கும் முறை குறித்துத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் முழுவதும் லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது இவர்களுடைய நோக்கம்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *