“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார்.
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
“நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியதாவது:
- நமது முன்னோர்கள் அறிவின் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
- இதன் மருத்துவ குணங்களையும், கால பருவ நிலைகளையும் அறிந்து, ஒருவருக்கொருவர் பயிர் விதை பரிமாற்றம் செய்து, விவசாய துறையில் மேன்மை பெற்றிருந்தனர்.
- நெல், நமது உணவு பொருள் மட்டுமல்ல. நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்துள்ளது. மங்கலம் மற்றும் அமங்கல காலங்களில் நெல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
- பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது.
- இதை பயிரிட்டு, ஏக்கருக்கு, 4,200 கிலோ நெல் அதிக மகசூலாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ளனர்.இது கரிகாலன் கட்டிய கல்லணை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாரம்பரியமிக்க, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை, தமிழகத்தில் விவசாயிகள் சிறிய அளவிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.
- இதை விவசாயிகளிடமிருந்து பெற்று, ஆராய்ச்சி மேற்கொண்டு, 13 ஆயிரத்து, 762 விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ரவிசங்கர் பேசுகையில், “”இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல்லை பாதுகாத்து விவசாயிகளிடம் பரப்ப, நபார்டு வங்கி நிதியுதவியை அளித்து வருகிறது. கிராமம்தோறும் நபார்டு உழவர் மன்றம் அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ள விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று பேசினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்