தாகம் தணிக்கும் தர்ப்பூசணி சாகுபடி

தகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக இருந்து இளைப்பாறுதல் தருவது தர்ப்பூசணி. நீர்சத்து நிறைந்த மருத்துவக் குணங்கள் கொண்ட தர்ப்பூசணி சாகுபடி செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • தர்ப்பூசணி  நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது.
  • இருதய நோய், சர்க்கரை நோய், குடல் புற்று நோய் ஆகியவற்றைத் தடுக்க தர்ப்பூசணி உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளன. 92 சதவிகிதம் நீர்ச்சத்தைக் கொண்டுள்ள இந்த தர்ப்பூசணி, குறைந்த அளவு கலோரி இருப்பதால் கொழுப்பே இல்லாததாலும் எடைக் குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.
  • இதில் அதிகளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதயத்துடிப்பைச் சீராகவும், சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.
  • இதில் உள்ள பீட்டா கரோட்டின், லைகோபின் ஆகிய கரோட்டினாய்டுகள் புரோஸ்டேட் சுரப்பி, மார்பகம், நுரையீரல், குடல் ஆகியவற்றில் புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. வைட்டமின்- பி 6 மூளை சுறுசுறுப்பாக இயக்கப் பெரிதும் உதவுகிறது.
  • சிட்ருலின், அர்ஜினைன் ஆகிய அமினோ அமிலங்கள் ஒட்டுமொத்த இருதயச் செயல்பாடுக்கும், யூரியாவை வெளியேற்றி ரத்த சுத்தகரிப்புக்கும் உதவுகிறது.

சாகுபடி முறைகள் :

  • பி.கே.எம். 1, சுகர்பேபி, அர்காமனிக், டிராகன் கிங், அர்காஜோதி, அர்கா ஐஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பெடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம்.
  • அங்ககச்சத்து நிறைந்த, வடிகால் வசதியுள்ள 6.5 முதல் 7.5 வரையுள்ள கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் ஏற்றது.
  • ஜனவரி முதல் மார்ச் ஏற்ற பருவமாகும்.

விதைப்பு:

  • நன்கு உழுது எட்டு அடி அகலப்பார் அமைத்து பார்களுக்கு இடையில் கால்வாய் பிடிக்க வேண்டும்
  • ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும்.
  • கால்வாயையொட்டி மூன்று அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
  • குத்துக்கு 2 செடிகள் இருக்குமாறு விதைத்த 15 ம் நாள் கலைத்து விட வேண்டும்.
  • விதைகளை ஊன்று முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது நீர்பயன்பாட்டைச் சிக்கனம் செய்து நிறைவான மகசூலை தர உதவும்.

உரமிடுதல்:

  • அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும்.
  • மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து தரவல்ல 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடி உரமாக இட வேண்டும்.
  • விதைத்த 30 வது நாளில் 22 கிலோ தழைச்சத்து தரவல்லை 50 கிலோ யூரியாவை மேல் உரமாக இடவேண்டும்.
  • எத்தரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மிலி (250 பிபிஎம்) அளவில் கலந்து, விதைத்த 15 ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒரு முறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு முறை:

  • வண்டுகள் தாக்குவதைத் தடுக்க ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி மாலத்தியான் 50 ஈசி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • பழ ஈ தாக்குவதில் இருந்து பாதுகாக்க நன்கு உழவு செய்து பழ ஈ க்களின் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். பழ ஈ தாக்குதல் வெப்ப காலத்தில் மிகக்குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைத்த கருவாடு, ஒரு மிலி டைக்குளோர்வாஸ் நனைத்த பஞ்சு வைத்த கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • 20 தினங்களுக்கு ஒரு முறை நனைத்த கருவாடும், வாரத்திற்கு ஒரு முறை டைக்குனோர்வாஸ் நனைத்த பஞ்சும் மாற்ற வேண்டும்.
  • லிண்டேன் பூச்சிக்கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் இப் பயிருக்கு தாவர நச்சாகப் பயிரை பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது. 120 தினங்களில் ஏக்கருக்கு 15 டன் தர்ப்பூசணி மகசூல் பெறலாம்.
  • எனவே விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து, கோடையில் தாகம் தணிக்கும் தர்ப்பூசணி சாகுபடி செய்து உயர் மகசூலும் உன்னத லாபமும் பெறலாம் என்றார் அவர்

நன்றி: தினமணி 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *