தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.

  • தென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 லிட்டர் முதல் 65 லிட்டர் வரை தண்ணீரை பூமியிலிருந்து எடுத்து கொள்வதாக கணக்கிடப்படுகிறது.
  • தென்னையின் வேர்கள் 250 அடிக்கு மேல் நீளமாக தண்ணீர் கிடைக்கும் இடம் தேடி செல்கிறது.
  • மழை பெய்யும் போது தோப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தடி நீர் மூலம் அல்லது வாய்க்கால் மூலம் பாய்ச்சும் தண்ணீர் வேகமாக ஆவியாகி சூரிய வெப்பத்தால், மேல் மண் சீக்கிரம் காய்ந்து வறண்டு விடுகிறது.
  • இதனால் அடிக்கடி தென்னந் தோப்புகளில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது உள்ளது.
  • பூமியின் மேல் பரப்பில் சரியாக தண்ணீர் சேமிப்பு இருந்தால் தான் தென்னை மரங்கள் தேவையான அளவு நீரை எடுத்துக் கொள்கிறது என்பதும், அத்தகைய தென்னை மரங்களில் பிஞ்சுகள் அதிகம் பிடித்து மகசுல் 50 சதவீதம் அதிகரிக்கிறது என்பதும் திருவையாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சியில் தெரியவந்தது.

மண் அரிப்பு தடுப்பு:

  • மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
  • தென்னந் தோப்புகளில் நான்கு ஓரங்களிலும் வரப்பு அமைக்க வேண்டும்.
  • மேடு பள்ளம் பார்த்து குறுக்கு நெடுக்குமாக வரப்பு அமைக்க வேண்டும்.தண்ணீர் வழிந்து ஓடிவிடாமல், தடுக்க வேண்டும்.இதன் மூலம் தென்னந் தோப்பில் உள்ள தேவையில்லாத உப்புத் தன்மை குறையும்.
  • தொடர்ந்து கிணறுகளில் ஊற்று பெருகி நீர் மட்டம் உயரும்.
  • தொடர்ந்து மழை அதிகமாக பெய்தால், தோப்புக்குள் மழை நீர் சேமிப்பு குட்டை ஒன்று அமைத்து, அதில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதில் மீன் வளர்த்து கூடிதல் வருமானத்தை பெறலாம்.மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

மழைநீர் சேமிப்பு:

  • மழை பெய்யும் போது, தென்னை மரம் வழியாக தண்ணீர் வழிந்து இறங்கி தூர் பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது.
  • மட்டை,ஓலை, கழிவுகள் பரப்பி இருப்பதால், கடுமையான வெயில் அனல் காற்றில் இருந்து வரும் வெப்பதை கூட சருகுகள் தாங்கி கொள்கிறது.
  • மேலும் வெப்பம் ஊடுருவது தாக்கப்பட்டு ஈரம் பாதுகாக்கப்படுகிறது.
  • இதனால் பூமி குளிர்ச்சியுடன் இருக்கும். மழை நீருடன் கலந்து வந்த நைட்ரஜன் நிலை நிறுத்தப்பட்டு தென்னை மரங்களில் வேர்கள் உறிஞ்சுகின்றன.
  • உரி மட்டை, உரி மட்டை தூள், உமி, மரத்தூள், இழை, தழைகள், வாழை, தாழை, கரும்பு சக்கை சருகுகள் என்று ஒரத்தில் ஒதுக்கும் கழிவுகள் அனைத்தையும் தென்னை மரங்களை சுற்றிலும் இரண்டு அடுக்குகள் போட்டு, தென்னந் தோப்புகளில் மழை நீர் சேமிப்புக்கு பயன்படுத்தலாம்.இதனால் சுற்றுப் புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.

தகவல் : வா.செ. செல்வம், தென்னை ஆராய்ச்சியாளர், திருவையாறு. தகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *