தென்னையைத் தாக்கும் எரிபூச்சி

தென்னையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று கொன்தேலா ரோடுண்டா என்ற எரிபூச்சியாகும்.

  • இது அந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினம் போன்ற உடலமைப்புடன் காணப்படும்.
  • இப்புழுக்களின் உடல்மீது, சிறு உரோமங்களும் அதன் நுனியில் வட்டமான சுரப்பிகளும் இருக்கும்.
  • இதிலிருந்து வெளிப்படும் திரவம் தோல் அரிப்பை ஏற்படுத்தும்.
  • இந்த வகை எரிபூச்சிகள் சில சமயங்களில் மட்டுமே தோன்றி சேதம் விளைவிக்கின்றன.
  • தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மாவட்டங்களில் முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் எரிபூச்சியின் தாக்கம் கோடை காலத்தில் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இவை பொதுவாக உயரமாக வளர்ந்துள்ள தென்னை மரங்களைத் தாக்குகின்றன.
  • தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென்னந்தோப்புகளில் இதன் தாக்கம் மிகுந்து காணப்படும்.
  • எரிபூச்சியின் புழுக்கள் தென்னை ஒலையின் பச்சையத்தைச் சுரண்டி சாப்பிட்டு நரம்புகளை மட்டுமே விட்டுவைக்கின்றன.
  • புழுக்களின் கழிவுப் பொருட்கள், மரத்தூள் போல் மரங்களுக்குக் கீழே மண்ணில் கிடந்து இருக்கும்.
  • இப்பூச்சிகள் இலைகளைத் தின்பது மட்டுமல்லாமது தென்னம்பாளைகளும் குரும்பைகளும் தாக்கி சேதம் விளைவிக்க வல்லவை.
  • இப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சி கரும்பழுப்பு நிறமாக 10 மி.மீ. நீளமும் 5 மி.மீ. அகலமும் கொண்ட அளவில் இருக்கும்.
  • ஒரு தாய்ப்பூச்சி இலைகளுக்கு அடியில் 200 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.

எரிபூச்சியின் கட்டுப்பாடு முறைகள்:

  • இந்த எரிபூச்சி சில இடங்களில் சில சமயம் மட்டுமே தோன்றி சேதப்படுத்துவதால் விவசாயிகள் இவற்றை முதலில் கவனமாகக் கண்காணித்து வரவேண்டும்.
    தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை விளக்குப்பொறிகள் மூலம் கண்டறிய வேண்டும்.
  • தாக்கப்பட்ட தென்னை ஓலைகளை சேகரித்து புழுக்கள், கூட்டுப்புழுக்களுடன் எரித்தோ அல்லது புதைத்தோ அழிக்க வேண்டும்.
  • போதிய அளவு நீர் பாய்ச்சினால் (சொட்டு நீர் / தெளிப்பு நீர் / வாய்க்கால் பாசன நீர்) எரிபூச்சியின் தாக்குதலை ஓரளவு குறைக்க முடியும்.
  • இயற்கையாகவே காணப்படும் குளவி வகை ஒட்டுண்ணிகள் எரிபூச்சிகளின் புழு மற்றும் கூட்டுப் புழுகளைத் தாக்கி உயிரியல் ரீதியாக கட்டுப் படுத்துகின்றன.
  • சேதம் மிகுந்து காணப்பட்டால் டைகுளோர் வாஸ் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி கலந்து ராக்கர் அல்லது பெடல் பம்பு தெளிப்பான்கள் மூலம் ஓலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
  • மாற்று மருந்துகளாக மீதைல் டெமட்டான் 4 மிலி/லி அல்லது ட்ரைஅசோபாஸ் 5 மிலி/லி போன்றவற்றையும் தெளிக்கலாம்.
    உயரமான மரங்களுக்கு டிராக்டர் பொருத்தப்பட்ட மரத்தெளிப்பான் உபயோகித்து பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.
  • எரிபூச்சியின் தாக்குதல் பற்றிய சேதத்தை சமாளிக்க விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் செயல்பட வேண்டும்.
    கருவிகள் பயன்படுத்த முடியாத இடங்களில் மிக உயர்ந்த மரங்களுக்கு 15 மிலி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 15மிலி நீருடன் சேர்த்து வேர் மூலம் செலுத்தியும் இலை தின்னும் தென்னை எரிபூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

எஸ்.மணிசேகரன்,
ஜெ.ஜெயராஜ்,
பூச்சியியல் துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *