இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு!

சீரான இடைவெளி, நேர்த்தியான விதைப்பு ஆகியவற்றின் மூலம், அதிக மகசூலை பெற, இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைக்கப்பட்டு வருகிறது.

மீஞ்சூர் ஒன்றியத்தில், நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வந்தன. ஆட்கள் பற்றாக்குறையால், வேர்க்கடலை பயிரிடுவதையும், ஆலைகளில், ‘கட்டிங் ஆர்டர்’ கிடைக்காமல், கரும்பு பயிரிடுவதையும் விவசாயிகள் தவிர்த்தனர்.நெல் சாகுபடி செய்ய, நடவுக்கும் அறுவடைக்கும் இயந்திரங்கள் உள்ளதால், விவசாயிகள் தொடர்ந்து நெல்லை பயிரிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது, வேர்க்கடலை பச்சை பயறு, தர்பூசணி உள்ளிட்டவைகளை, அப்பகுதி வாசிகள் இயந்திரம் மூலம் விதைக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர். இயந்திரத்தால், சீரான இடைவெளியில், நேர்த்தியாக விதைக்கப்படுவதால், அதிக மகசூல் கிடைக்கும் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, பொன்னேரி, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

“உழவுப் பணிகளை மேற்கொள்ள மூன்று பேர், விதை பருப்பு போட, ஒன்பது பேர் என, ஒரு ஏக்கருக்கு, 12 பணியாட்கள் தேவை. இயந்திரத்தை பயன்படுத்தி விதைப்பதால், ஒரே ஒரு பணியாளர் போதுமானதாக உள்ளது. இயந்திரத்தில் விதைத்தால், சீரான இடைவெளியில் வேர்க்கடலை பயிர் வளரும். அதனால், போதிய வெளிச்சம் கிடைத்து நன்கு வளரும். களை எடுக்கும் பணிகளும் எளிதாக இருக்கும். இதனால், இம்முறை இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைத்துள்ளோம்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *