குறிப்பிட்ட அளவு டிஏபி கரைசலை தெளித்தால், பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என ஆர்க்காடு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
பயறு வகை பயிர்களுக்கு ஏன் டிஏபி கரைசல் அவசியம்?
- பயறு வகைகளில் 20 முதல் 24 சதவீத புரதச்சத்து உள்ளது. இச்சத்து உற்பத்தியாவதற்கு மணிச்சத்து அவசியம்.
- மண்ணில் இருந்து கிடைப்பதை விட, தாவரங்களின் இலை வழியாக மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது.
- பூக்கும் பருவத்துக்குப் பிறகு பயிர்களின் வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை குறைந்து விடும்.
- எனவே தழைச்சத்து, மணிச்சத்து கொண்ட டிஏபி கரைசலை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பயன் கிடைக்கும்.
டிஏபி கரைசல் தெளிக்கும் முறை:
- பூக்கும் தருணத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசலை (லிட்டருக்கு 20 கிராம்) 2 முறை தெளிக்க வேண்டும்.
- ஒரு ஹெக்டருக்கு 625 லிட்டர் டிஏபி கரைசல் தேவைப்படும். இவற்றை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
- முதலில் 12.5 கிலோ டிஏபி உரத்தை 10 லீட்டர் நீரில் கலந்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் ஊற வைக்க வேண்டும்.
- மறுநாள் வாளியின் மேல் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி எடுக்க வேண்டும். இதில் நீர் சேர்த்து 625 லிட்டர் கரைசல் தயாரித்துக் கொள்ளலாம்.
- இந்த கரைசலை கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படும்படி மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
- பயறு வகை பயிர்களுக்கு பூக்கும் ஒரு வாரத்திற்கு முன்பும், பூத்த ஒரு வாரத்திற்கு பின்பும் இரு முறை தெளிக்க வேண்டும்.
- 2 சதவீதத்திற்கும் அதிகமாக டிஏபி உபயோகித்தால், இலைகள் கருகிவிடும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட அளவை மட்டும் உபயோகிப்பது நல்லது.
- பூச்சி மருத்துகளை சேர்த்து தெளிக்கக் கூடாது
ஆர்க்காடு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்