பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் தரும் டிஏபி கரைசல்

குறிப்பிட்ட அளவு டிஏபி கரைசலை தெளித்தால், பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என ஆர்க்காடு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

பயறு வகை பயிர்களுக்கு ஏன் டிஏபி கரைசல் அவசியம்?

  • பயறு வகைகளில் 20 முதல் 24 சதவீத புரதச்சத்து உள்ளது. இச்சத்து உற்பத்தியாவதற்கு மணிச்சத்து அவசியம்.
  • மண்ணில் இருந்து கிடைப்பதை விட, தாவரங்களின் இலை வழியாக மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது.
  • பூக்கும் பருவத்துக்குப் பிறகு பயிர்களின் வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை குறைந்து விடும்.
  • எனவே தழைச்சத்து, மணிச்சத்து கொண்ட டிஏபி கரைசலை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பயன் கிடைக்கும்.

டிஏபி கரைசல் தெளிக்கும் முறை:

  • பூக்கும் தருணத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசலை (லிட்டருக்கு 20 கிராம்) 2 முறை தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு 625 லிட்டர் டிஏபி கரைசல் தேவைப்படும். இவற்றை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • முதலில் 12.5 கிலோ டிஏபி உரத்தை 10 லீட்டர் நீரில் கலந்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் வாளியின் மேல் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி எடுக்க வேண்டும். இதில் நீர் சேர்த்து 625 லிட்டர் கரைசல் தயாரித்துக் கொள்ளலாம்.
  • இந்த கரைசலை கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படும்படி மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
  • பயறு வகை பயிர்களுக்கு பூக்கும் ஒரு வாரத்திற்கு முன்பும், பூத்த ஒரு வாரத்திற்கு பின்பும் இரு முறை தெளிக்க வேண்டும்.
  • 2 சதவீதத்திற்கும் அதிகமாக டிஏபி உபயோகித்தால், இலைகள் கருகிவிடும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட அளவை மட்டும் உபயோகிப்பது நல்லது.
  • பூச்சி மருத்துகளை சேர்த்து தெளிக்கக் கூடாது

ஆர்க்காடு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *