இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு

“இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’ என, 200க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று நடந்தது. இதில் பொன்னேரி தாலுகா, பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிப்பாளையம் மக்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, “”எங்கள் கிராமத்தைச் சுற்றி, 100க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இதனால், எங்கள் கிராமத்தில், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விட்டது.

குடிநீருக்காக பயன்பட்டு வந்த மூன்று கிணறுகள் உவர்ப்பாகியதால், குடிநீருக்காக, 5 கி.மீ., தூரத்தில் உள்ள சேகன்யம் கிராமத்திற்கு சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.

விவசாய நிலங்கள் அனைத்தும், உவர்ப்பு தன்மையால் பயன்படுத்த முடியாமல் வீணாகிக் கிடக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும், இறால் பண்ணைகளை மூட வேண்டும்,” என்றனர்.
மீஞ்சூர் பேரூராட்சி, 8வது வார்டில் உள்ள நேதாஜி நகர், பாப்பாரபாளையம் கலெக்டரிடம் அளித்த மனுவில், “30 ஆண்டுகளாக இங்கு கடும் குடிநீர் பிரச்னை உள்ளது. மீஞ்சூரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதி மேடாக இருப்பதால் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிநீருக்காக, 6 கி.மீ., தூரம் பயணித்து குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

வீட்டு குடிநீர் இணைப்பு இருந்தாலும், வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. மாதம்தோறும் குடிநீர் வரி மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். வீடு கட்ட உரிமம் வழங்க, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர். ஆனால் எங்கள் பகுதிக்கு சாலை வசதி எதுவும் ஏற்படுத்தி தரவில்லை’ என்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *