வெண்டை சாகுபடி டிப்ஸ்

தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாள்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட சந்தைக்கு அனுப்பி வைத்தால் முழு மகசூலையும் பணமாக்க இயலும்.

பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள்.
வெண்டையில் பல ரகங்கள் உண்டு. அவை கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகியவையாகும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

 

கோ.பி.எச். 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4-இன் இனக்கலப்பு. இது மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்ற வகை. பழமானது அடர் பச்சை, இளம், குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். மகசூல் ஹெக்டேருக்கு 22.1 டன்.

கோ 1 (1976): இது ஹைதராபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். பழமானது இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூலான 90-ஆவது நாளில் ஹெக்டேருக்கு 12 டன். சதை அளவு 75 சதவீதம், நாரின் அளவு 14.06 சதவீதம்.
 கோ 2 (1987): இது ஏ.ஈ. 180, பூசா சவானியன் முதல் சந்ததி இனக்காப்பு. பழத்தின் பரப்பானது குறைந்த முடிகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகை, சந்தைக்கு சிறந்தது. பழமானது நீளமாக 7-8 மேடுகள் கொண்டது. மகசூல் 15-16 டன் 90 நாள்கள்.
 கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு. மகசூல் 16-18 டன் எக்டர். மஞ்சள் நிற மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
 மண், தட்பவெப்பநிலை:

வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா மண் வகை நிலத்திலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
 விதையும், விதைப்பும் விதையளவு:

  • ஹெக்டேருக்கு 7.5 கிலோ

நிலம் தயாரித்தல் :

  • மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப் பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.

விதை நேர்த்தி, விதைத்தல்:

  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். நிழலில் ஆற வைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும்.
  • பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும்.

நீர் நிர்வாகம்:

  • நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உரமிடுதல் :

  • அடி உரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
  • 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

இலைவழி ஊட்டம் :

  • ஒரு சதவீத யூரியா கரைசலை விதைத்து 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.
  • மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60-ஆவது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.

உரப் பாசனம்:

  • கலப்பு ரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை,மணி, சாம்பல் சத்து முறையே ஹெக்டேருக்கு 200:100:100கிகி ஆகும். இதில் 75 மணிச் சத்தை (75 கிகி மணிச்சத்து 469 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும்.
  • மீதமுள்ள தழை, மணி, சாம்பல் சத்து 200:25:100 கி.கி. உரப் பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனமாக அளிக்க வேண்டும்.

 ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
காய்த் துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விடவேண்டும். ஹெக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். சாம்பல் நிற வண்டைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இடவேண்டும்.
நூற்புழு: ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.
அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
மஞ்சள் நரம்புத் தேமல் நோய்:இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற ரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய ரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.

சாம்பல் நோய் என்பதும் அடிக்கடி வெண்டையை தாக்கும் நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவெண்டும்.
 அறுவடை:

  • நட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடவேண்டும். ஒன்று முதல் 2 நாளுக்கு ஒரு முறை அறுவடை செய்வது முக்கியமாகும்.

மகசூல் :

  • ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12-15 டன் வெண்டைக் காய்கள் கிடைக்கும்.
  • வெண்டைப் பயிர் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி ஆலோசனைகளை பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *