இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை

அளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக பூச்சிகளில் நோயை உருவாக்கி இயற்கை வழியில் அவற்றை அழிக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

பெவேரியா பேசியானா என்ற வெண்மை பூஞ்சாணம் இதில் உயர்ரக பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.

இரசாயன பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.  முன்னுக்குப்பின் முரணாக அதிக வீரியத்தன்மை கொண்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் அதிகமாகி எண்ணிக்கையிலும் அதிகமாகின்றன. சில நேரங்களில் இம் மருந்துகள் நன்மைத் தரும் பூச்சிகளையும் அழிக்கின்றன.

எனவே நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கும் முறையை கையாள்வது சிறந்தது.  இது குறித்து காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் துறை வல்லுநர் விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

  • “பெவேரியா பேசியானா என்ற பூஞ்சாணத்தை உருவாக்கும் விதைகள், மெல்லிய, வெண்மை நிற பருத்தி நூல் போன்ற இழைகள் சூழ்ந்த நீள்வட்ட மற்றும் வட்ட வடிவத்திலும் காணப்படும்.
  • ஒன்றிலிருந்து ஐந்து மைக்ரான் நுண்ணணுவுள்ள நீள்வட்ட வித்துக்கள் அனைத்து சூழலிலும், ஐந்திலிருந்து ஏழு மைக்ரான் நுண்ணணுவுள்ள வட்ட வடிவ வித்துக்கள், உலர் சூழலிலும் பூஞ்சாண வளர்ச்சியை விரைவுபடுத்தும்.
  • இந்த பூஞ்சாணம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் மீது நான்கு அல்லது ஐந்து நாள்களில் நோயை உருவாக்கி அவைகளை அழிக்கும்.
    செயல்பாடுகள்:
  • பூஞ்சாண இனத்தைச் சார்ந்த வெண்மை நிறமுடைய பெவேரியா பேசியானா என்ற உயிரக பூச்சிக்கொல்லியானது நெல்லில் தோன்றும் இலை சுருட்டுப் புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப் புழு, குட்டைக் கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத்தத்துப் பூச்சி ஆகியவை மீது நோய்களை உருவாக்கி அழிப்பதோடு தக்காளி பழத் துளைப்பான் மற்றும் மணிலா, பருத்தி, பயறு வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழுவையும் புரடீனியா புழுவையும் அழிக்கும் வல்லமைப் பெற்றது.
  •  இது மட்டுமன்றி, பருத்தியில் தோன்றும் காய்ப்புழுக்கள், கரும்பில் தோன்றும் தண்டுத் துளைப்பான்கள், வெள்ளை வண்டுகள், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிகப்புக் கூண் வண்டு மற்றும் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பான்கள், மா-வில் தோன்றும் இலை மற்றும் பூப் பிணைக்கும் புழுக்கள், தேக்கு துளைப்பான் மற்றும் வாழையில் கிழங்கு மற்றும் தண்டுக் கூண் வண்டுகள் ஆகியவைகளும் இத்தகைய பூஞ்சாணத்தால் நோய்பட்டு இறக்கின்றன.
  • இந்த நன்மைப் பயக்கும் பெவேரியா பேசியானா, புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ. 170-க்கு கிடைக்கிறது.
    உபயோகிக்கும் முறை:
  • பயிர்களில் இளம் புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குஞ்சுகள் தோன்றியவுடன் ஏக்கர் ஒன்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெவேரியா பேசியானாவை 200 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • இதை அதிகாலைப் பொழுதில் பயிர்கள் மீது தெளிப்பது புழுக்கள் மற்றும் குஞ்சுகள் நோயுற ஏதுவாக அமையும்.
    கவனக்குறிப்புகள்:
  • வெண்மை பூஞ்சாண உயர்ரக பூச்சிக்கொல்லியை, பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும்.
  • தெளிப்பதற்கு நல்லத் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் உப்பு நீர், கலங்கல் நீர், நுரைப்பு நீர் ஆகியவற்றை தெளிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது.
  • இளம் புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குஞ்சுகள் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும்.
  • இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுடனும், வேப்ப எண்ணெய்யுடனும் கலக்கக் கூடாது.
  • இப் பூச்சிக்கொல்லியை பயிர்களின் மீது தெளித்தவுடன் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
  • நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பச்சைப்பயிறு, காய்கறிப் பயிர்களான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரை மலர் பயிர்களான மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, கேந்தி மற்றும் தோப்புப் பயிர்களான தென்னை, வாழை, மா, கொய்யா, சப்போட்டா, பலா, நெல்லி பயிர்களில் இலை, தண்டு மற்றும் காய்களில் தாக்குதலை ஏற்படுத்தும் பல வகையான புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை இந்த வெண்மை பூஞ்சாணம் எளிதில் அழிக்கும்.
  • இதைப் பயன்படுத்துவதால் பூச்சிக் கட்டுப்பாட்டுச் செலவு 75 சதவீதம் சேமிக்கப்படும்.
  • தீமை செய்யும் பூச்சிகளைத் தவிர மற்ற உயிர்களுக்குத் தீமை கிடையாது. நீர், நிலம், காற்று, உண்ணும் உணவு ஆகியவை மாசுபடாது’ என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *