மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?

மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்தபின் செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்தல், மா மரத்தில், அதிக விளைச்சலை பெற முடியும்

கவாத்து செய்வதால் வரும் ஆண்டுக்கு தேவையான இளந்தளிர் உற்பத்தியை ஊக்குவித்து விளைச்சலை பெருக்க முடியும். ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் தோட்டத்தினை நன்குபராமரிக்க இயலும்.

மரத்தின் வயது இனைப்படர்வை பொறுத்து மா மரத் தோட்டங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.

  • இளந்தோட்டம் – 5 முதல் 10 ஆண்டுகள் வரை
  • நன்கு விளைச்சலைத் தரக்கூடிய தோட்டம் – 10 முதல் 25 ஆண்டுகள் வரை
  • வயதான உற்பத்தி குறைவான தோட்டம் – 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்கள்

கவாத்து செய்யும் காலம் – அறுவடைக்குப் பிறகு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை

இளந்தோட்டகவாத்து முறை

  • கூர்மையான கத்தியைக் கொண்டு தோல் பகுதியில் காயம் ஏற்படாதவாறு குறுக்கும் நெடுக்குமான கிளைகளை வெட்டவேண்டும்.
  • மா மரத்தின் நடுவில் மேல்நோக்கி வளர்ந்த ஓரிரு கிளகைளை வெட்டுவதன்மூலம் சூரிய வெளிச்சம் ஊடுருவ ஏதுவாக இருக்கும். மேலும் வளர்ச்சியும் மட்டுப்பட்டு பரந்து வளர ஏதுவாக இருக்கும்.
  • மரத்தின் உள்பகுதியில் அதனை அடுத்த தண்டுப்பகுதியில் காணப்படும் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும்.
  • அதிக துளிர்விடும் நுனிக்கிளைகளில் திடகாத்திரமான இரண்டு அல்லது மூன்று கிளைகளைவிட்டு மீதமுள்ள துளிர்களை நீக்கிவிட வேண்டும்.
  • பொதுவாக 25-30 சதவீத கடந்தவருட கிளைகளை நீக்க வேண்டும்.

விளைச்சல் தரக்கூடிய தோட்டம்:

  • நடுப்பகுதியில் இருந்து வளர்ந்த ஒன்று (அ) இரண்டு மேல்நோக்கி வளர்ந்த கிளைகளைக் குறைப்பதன் மூலம் மரத்தின் உயரம் குறைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சூரிய வெளிச்சம் உள்ளே கிளைகளுக்கு கிடைத்து ஒளிச்சேர்க்கை எளிதாக நடைபெறுகிறது.
  • மரத்தின் உள்பகுதியில் அதனை அடுத்த தண்டுப்பகுதியில் காணப்படும் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும்.
  • நுனிக்கிளைகளில் திடகாத்திரமான 2-3 கிளைகளை விட்டுவிட்டு மீதமுள்ள துளிர்களை நீக்கிவிட வேண்டும்.
  • கிளைகளை வெட்டும்போது அதன் பட்டைகளுக்குச் சேதம் ஏற்படாதவாறு கிளையின் அடிப்பாகத்தில் லேசான வெட்டுக்கொடுத்து பின் அகற்ற வேண்டும்.
  • காய் பிடித்த மரங்களில் இனைப் படர்வு மேலாண்மை செய்யும்போது 25 சதவீத கடந்தவருட வளர்ச்சியை நீக்குவதன்மூலம் மீதமுள்ள கிளைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

வயதான உற்பத்தி இல்லாத தோட்டம்:

  • காய்பிடிக்கும் தன்மையை தொடர்ந்து கவனித்துவருவதன் மூலம் கண்டறியலாம்.
  • மரங்களில் தேவையற்ற பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • நடுப்பகுதியில் இருந்து வளர்ந்த ஒன்று (அ) இரண்டு மேல்நோக்கி வளர்ந்த கிளைகளைக் குறைப்பதன் மூலம் மரத்தின் உயரம் குறைக்கப்படுவதோடு சூரிய வெளிச்சம் உள்ளே கிளைகளுக்குக் கிடைத்து ஒளிச்சேர்க்கை எளிதாக நடைபெறுகிறது.
  • மரத்தின் உள்பகுதியில் மற்றும் அதனை அடுத்த தண்டுப்பகுதியில் காணப்படும் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும்.
  • பொதுவாக 30-40 சதவீத வளர்ச்சியை நீக்குவதன்மூலம் புதிய கிளைகளை ஊக்குவித்து நல்ல மகசூல் பெறலாம்.

கவாத்துக்குப் பிந்தைய செய்நேர்த்தி:

  • ஒவ்வொரு மரத்திற்கும் 2.5 கிலோ யூரியா, 6 கிலோ சூப்பர், 1.6 கிலோ பொட்டாஷ் இடவேண்டும்.
  • இதை உரத்தேவையின் பாதியளவு யூரியா, முழு அளவு சூப்பர், அரை அளவு பொட்டாஷ் உரங்களை பிப்ரவரி முதல் மார்ச் மாத இறுதிக்குள் இடவேண்டும். பின் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • கவாத்து செய்த பின்னர் மீதமுள்ள உரத்தினை இடவேண்டும்.

(தகவல்: த.நா.பாலமோகன், சா.ராஜதுரை, பொ. மேகலா, பழத்துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோவை-641 003). -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *