உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய், பூ துளைப்பான்கள், சிலந்திபேன், வேர் அழுகல் மற்றும் எலிகள் சேதமும், சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகளில் இலைகள் சுருங்கி நெளிந்து, மஞ்சள் தேமல் நோயுடன் காணப்படுகிறது.  இதனால், வளர்ச்சி குன்றி காணப்பட்டு பூ மற்றும் பிஞ்சுகள் குறைந்து, இலை மற்றும் தண்டு பகுதிகளில் இருந்து சாறை உறிஞ்சுகிறது.

மேலும், காய்ப்புழுக்கள், காய்களை துளைத்து அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

சிலந்திப் பேனானது, தற்போது காற்று மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக பரவுகிறது. இந்தப் பூச்சி, இலையின் அடி நரம்புகளின் ஓரங்களில் சல்லடை போன்ற பின்னல்களை எற்படுத்திக்கொண்டு சாறை உறிஞ்சுகிறது. இதனால் நரம்பு ஓரத்தில் படை வந்தது போல காணப்படுகிறது.

தாவர வேர்புழுக்களின் சேதமும், வேர் அழுகல் நோயும் அதிகம் காணப்படுகிறது. இதனால், செடி வாடி இலைகள் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

மேலும், மானாவாரி நிலங்கள் அதிகமாக இருப்பதால் அங்குள்ள எலிகளுக்கு உணவு சரியாக கிடைக்காமல், உளுந்து பயிரிடப்பட்டுள்ள வயல்களில் சேதத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது

கட்டுபடுத்தும் வழிகள்

  • உளுந்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை கட்டுப்படுத்த, வயலில் களை இல்லாமல் இருப்பதோடு, மண்ணின் தரத்தை அறிந்து தழைச்சத்து இட வேண்டும்.
  • சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகளை தெளித்தல், ஒட்டும் பொறி வைத்தல், பொருளாதார சேத நிலையைப் பொறுத்து ராசாயன பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
  • காய்புழுக்களை கட்டுப்படுத்த விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும்.
  • எலிகளைக் கட்டுப்படுத்த வயலில் ஆந்தைப்பந்தல் அமைத்தால், இரவு நேரத்தில் ஆந்தை எலிகளைப் பிடித்து உண்ணும்.
  • சிலந்திப் பேனை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி தெளிக்க வேண்டும். இந்தப் பூச்சியின் சேதம் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது, ரசாயன பூச்சிக்கொல்லியான ஓமைட் அதாவது புரோபர்கிட் அல்லது டைகோபால் அல்லது ஈத்தியான் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மில்லி வீதம் ஒட்டும் திரவம் ஒரு மில்லி கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • தாவர நூல்புழு மற்றும் வேர் அழுகல் நோய் இருந்தால் அதிகமாக மட்கிய தொழு உரம், வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். நன்மை செய்யும் எதிர் உயிர் பூஞ்சாணம் – டி.விரிடி 2 கிராம் மற்றும் எதிர் உயிர் பாக்டீரியாவான சூடோமோனாஸ் 2 கிராம் உள்ளிட்டவற்றை தெளிக்கலாம் அல்லது குருணை மருந்தை ஏக்கருக்கு 4 கிலோ இட்டு, பவிஸ்டின் என்ற பூஞ்சாண கொல்லியை கரைத்து செடிக்கு செடி நன்கு ஊற்றவும்.

மேலும், விவரங்களுக்கு தொழில் நுட்ப வல்லுநரான சி. சங்கரை 04328293251, 0432293592 உள்ளிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *