திருப்புல்லாணி அருகே செடிகளைப் பயிரிட்டு ஆறடி உயரம் வரை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொக்கரனேந்தல் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சாத்தையா. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது.
இதுகுறித்து விவசாயி சாத்தையா கூறியது:
- ஒரு ஏக்கரில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்துள்ளோம்.
- 45 நாள்கள் முதல் 70 நாள்களுக்குள் பூப்பூத்தவுடன் அதனை அப்படியே அந்த நிலத்திலேயே மடக்கி உழுது விடுவோம்.
- இப்பயிரானது 6 அடி வரை நன்றாக வளர்ந்து பூப்பூத்தவுடன் அதை அந்த இடத்திலேயே மடக்கி உழுது அதையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இவ்வாறு செய்வதால் அடுத்து போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. செலவும் அதிகம் இருக்காது.
- மண்ணின் வளம் கெடாமல் பாதுகாக்கப்படும்.
- இந்த தக்கைப்பூண்டு செடிகள் உரமாக மாறி மண்ணின் தன்மையை அதிகரிக்கும்.
- அரசு ஒரு கிலோ விதை ரூ.40 வீதம் மானியத்தில் வழங்கியுள்ளது. நாங்கள் ரூ.800 மதிப்புள்ள 20 கிலோ விதைகளை இலவசமாக வாங்கி பயிரிட்டுள்ளோம்.
- முக்கியமாக அடுத்து போடப்படும் பயிருக்கு தழைச்சத்து கிடைத்து விடுவதுடன் பூச்சி தாக்குதலே இருக்காது என்பதும் குறிப்பிடத் தக்கது.
- ஒரு மூட்டை ரசாயன உரம் ரூ.1500 வரை வாங்க வேண்டிய இந்தக்காலத்தில் இது போன்ற தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன் நல்ல மகசூலையும் பெறலாம் என்றார்.
நன்றி:தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
தக்கை பூண்டு விதை மாண்யத்தில் வாங்க வேண்டும். விபரம் தேவை