தமிழகத்தில் வேளாண்மை மண்ணில் நுண்ணுாட்ட சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இச்சத்து பற்றாக்குறையால் பயிர் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வேளாண் வருமானம் கணிசமாக குறைகிறது.
பயிர் வளர்ச்சிக்கு நுண்ணுாட்ட சத்து மிக குறைந்த அளவில் தேவைப்படுகிறது. இவ்வுரமின்றி பயிரால் தனது வாழ்க்கை சுழற்சியை பூர்த்தி செய்ய இயலாது. பயிர் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு நுண்ணுாட்ட சத்துக்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, போரான், மாலிப்டினம், குளோரைடு ஆகிய ஏழு இன்றியமையாத சத்துக்கள் அவசியம்.
மண்ணில் மலட்டுத்தன்மை
விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரங்களான மாட்டு சாணம், ஆட்டு உரக்கழிவுகள், பயிர் கழிவுகள், பசுந்தாள் மற்றும் பசுந்தழை போன்ற இயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தினர். இதனால் பயிர்களுக்கு தேவையான அனைத்து நுண்ணுாட்ட சத்துக்களும் போதுமான அளவில் கிடைத்தது. பயிர் மகசூல் மற்றும் மண்வளம் பாதிக்கப்படாமல் இருந்தது.
அதன் பின்னர் விவசாயிகள் முழுமையாக செயற்கை உரங்களை வேளாண்மைக்கு பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டு நுண்ணுாட்ட சத்து குறைபாடு, மண் மற்றும் பயிரில் தோன்றி பயிர் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆய்வின்படி எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் துத்தநாகம் 63.3 சதவீதம், போரான் 21 சதவீதம், தாமிரம் 7.5 சதவீதம், மாங்கனீசு 7.7 சதவீதம், இரும்பு 19 சதவீதம் என்ற அளவில் நுண்ணுாட்ட சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இப்பற்றாக்குறையை சரிசெய்ய மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிடுவது நல்ல பயன் தரும்.
நுண்ணுாட்ட சத்து குறைபாடு
மண் மற்றும் ஒவ்வொரு பயிருக்கும் தேவையான நுண்ணுாட்ட சத்துகளின் அடிப்படையில் நுண்ணுாட்ட கலவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை நெல் (பாசனம்/மானாவாரி), மக்காச்சோளம் (இறவை/மானாவாரி), கரும்பு, பருத்தி (இறவை /மானாவாரி), பயிறு வகைகள் (இறவை/மானாவாரி), நிலக்கடலை (இறவை/மானாவாரி), எள் (இறவை/மானாவாரி), சிறுதானிய பயிர்கள் (இறவை/மானாவாரி) மற்றும் தென்னை போன்ற பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட கலவையை உருவாக்கியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுாட்ட கலவை முழுவதும் அடியுரமாக மண்ணில் இட வேண்டும். நுண்ணுாட்ட கலவையை மண்ணில் இடுவதற்கு முன்பு தொழு உரத்துடன் சேர்த்து ஊட்டமேற்ற வேண்டும். அதாவது 1:10 என்ற விகிதத்தில் நுண்ணுாட்ட கலவையும், மக்கிய தொழுவுரத்தையும் கலந்து மிதமான நீரை தெளித்து, ஒரு மாதம் வரை நிழலில் வைத்திருந்து, ஊட்டமேற்றிய பின் அடியுரமாக இடுவது மிகவும் சிறந்தது.
தொடர்புக்கு 8608315942 .
முனைவர் மு.திருநாவுக்கரசு (மண்ணியல்)
சு.செந்தில்குமார் (தோட்டக்கலை)
காந்தி கிராம கிராமிய பல்கலை
திண்டுக்கல்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்