கோவைக்காய் சாகுபடி

துரிதமாக படர்ந்து வளரக்கூடிய காய்கறியான கோவைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சமையலுக்குத்தவிர பச்சைக்காய்கறியாக உண்பதற்கும் வற்றல் போடுவதற்கும் மிகவும் ஏற்றது. பல்லாண்டு பயிரான இது ஆண்டு முழுவதும் விளைச்சலைத் தரக்கூடியது. குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் 8-9 மாதங்களுக்கு விளையும்.
ரகங்கள்:

  • வணிக ரீதியாக பிரபலமான ரகங்கள் இல்லை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஆணைக்கட்டி என்ற இடத்திலுள்ள கோவைக் கொடியிலிருந்து மரபுவழி தேர்வு செய்யப்பட்ட ஒரு வளர்ப்பு ஆராய்ச்சியில் உள்ளது.
  • இதன் காய் நீண்ட பச்சை நிறத்தில், வெண்மை நிறக் கோடுகளைக் கொண்டதாக சராசரியாக ஒரு எக்டருக்கு 65-70 டன் காய்களை விளைச்சலாக தரவல்லது.
  • கோவைக்காய் பயிர் ஓரளவு வெப்பம் தாங்கி வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும். களர் உப்பு நிறைந்த மண்ணில் நன்கு வளர்ந்து விளைச்சலைத் தரக்கூடியது.

இனப்பெருக்கம்:

  • இளந்தண்டிலிருந்து பெறப்பட்ட வெட்டுக்குச்சிகள் மூலம் பொதுவாக இனப்பெருக்கம் செய்யலாம்.
  • நன்கு வளர்ந்த தண்டில் பருமனான பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 20லிருந்து 30 செ.மீ. நீளமும் 1-2 செ.மீ. பருமனும் உள்ள வெட்டுக்குச்சிகளை மேட்டுப் பாத்திகளில் 25 செ.மீ. து 15 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் 1:1:1 என்ற விகிதத்தில் மணி, மணல், மக்கிய தொழு உரம் கலந்து நிரப்பி நடவேண்டும்.
  • தினமும் நீர் ஊற்றி பராமரித்தால் 35-40 நாளில் நன்கு வேர் பிடித்துவிடும்.

நடவு:

  • நன்கு வேர் பிடித்த வெட்டுக்குச்சிகளை எடுத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • 2.5 து 2.5 மீட்டர் இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து 15 நாட்கள் சூரிய ஒளி படும்படி வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர் குழி ஒன்றுக்கு மேல் மண், லீ-1 கிலோ மக்கிய தொழு உரம், லீ கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து குழிகளை நிரப்பி நடவேண்டும்.
  • கோடைப்பருவம் நீங்கலாக ஆண்டு முழுவதும் கோவைச்செடி நடவு செய்யலாம். எனினும் ஜூன் – ஜூலை நடவுக்கு ஏற்ற பருவமாகும்.

பந்தல் அமைத்தல்:

  • கோவைக்காய் பந்தலில் படரும் பயிர். எனவே கொடி வகைக் காய்கறிகளுக்கு அமைப்பது போல பந்தல் அமைத்தல் மிகவும் அவசியமானது.

பூ, காய் பிடிக்கும் பருவம்:

  • நடவுச்செடி கோவைக்காய் வேர் பிடித்ததிலிருந்து சுமார் 45-50 நாட்களில் பூக்கள் தோன்றி 50 நாட்களில் காய்க்கும் பருவத்திற்கு வரும்.
  • காய்கள் மகரந்த சேர்க்கை இல்லாமல் உருவாகும் தன்மையைக் கொண்டது.
  • ஆண்டு முழுவதும் காய்களை அறுவடை செய்வதால் கோவைக்காய் வளர்ச்சிக்கு ஆண்டுக்கு 4 முறை உரமிடுதல் அவசியம்.
  • ஒரு எக்டருக்கு 60, 40, 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துள்ள உரங்களை இடவேண்டும். தழை, சாம்பல் சத்தினை நான்குபாகமாக பிரித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.
  • தழைச்சத்தில் நான்கில் ஒரு பகுதியும், மணிச்சத்தினை நடும்பொழுது அடியுரமாகவும் கொடுக்க வேண்டும். மேலும் நுண்ணூட்டச் சத்துக்களை அவ்வப்போது இடுவதன் மூலம் சத்துக்கள் நிறைந்த தரமான காய்களை அதிக அளவில் பெறலாம்.
  • சொட்டு நீர் உரப்பாசனம் வழியாகவும் தற்போது கோவைக்காய் பயிரிடப் படுகிறது. சுமார் நான்கு ஐந்து நாட்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் நல்லது.
  • சொட்டு நீர்ப்பாசன முறையில் வளர்த்தால் ஒரு நாளைக்கு சுமாராக செடி ஒன்றிற்கு 10 லிட்டர் நீர் கொடுக்கலாம். மண்ணை அவ்வப்போது கொத்திவிடுவதும் களை எடுப்பதும் அவசியம்.

செடியை வடிவமைத்தலும் கவாத்து செய்தலும்:

  •  கோவைக்காய் கொடியை தரையிலிருந்து 1.5 – 1.75மீ உயரத்தில் பந்தலில் படரவிட வேண்டும்.
  • ஆரம்ப காலங்களில் தரை மட்டத்திலிருந்து பந்தல் உயரம் வரை சணல் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் கயிறு கட்டிவிட்டாலும் பந்தலில் எளிதாக படர்ந்து வளரும்.
  • அதிகப்படியாக வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
  • ஒரு ஆண்டு வளர்ச்சி அடைந்ததும் குளிர்காலத்தில் பந்தலை ஒட்டி 1.5 மீட்டர் உயரத்திற்கு நன்கு வளர்ந்த தண்டுகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும்.
  • பின்னர் உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நன்கு தழைத்து வளரும்.
  • செடி நட்ட 50-60 நாட்களில் காய்கறி அறுவடைக்கு வரும். நல்ல பச்சைநிற காய்களை 2 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம்.
  • வருடத்திற்கு ஒரு செடியிலிருந்து 30-40 கிலோ காய்கள் பெறலாம்

(தகவல்: முனைவர் பி.ஜான்சிராணி, முனைவர் சி.சிபா, வெ.ராஜ்ஸ்ரீ, காய்கறிப்பயிர் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 04226611289).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கோவைக்காய் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *