சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் பி.ஆனந்தி மற்றும் கு.கைல்ஸ்லியோ ஜஸ்டின் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சோளம் சுமார் 3.2 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், தென் தமிழ்நாட்டில் 1.12 லட்சம் ஹெக்டரில் சோளம் 7 மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

சோளத்தைத் தாக்கக் கூடிய பூச்சிகளுள் குருத்து ஈ, தண்டுப் புழு, கதிர்நாவாய் பூச்சி, கதிர் ஈ மற்றும் அசுவிணி ஆகியன முக்கியமானவை. இப் பூச்சிகளை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெறலாம்.

சோள குருத்து ஈ:

  • சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிரில் முதலில் வரக் கூடிய ஒரு முக்கியமான பூச்சி இதுவாகும். இப் பூச்சி ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை உள்ள பயிர்களைத் தாக்கும்.
  • இந்த ஈ இளம் பயிர்களின் நடுக்குருத்தை துளைத்துக் கொண்டு உண்பதால் இந்த பயிரின் நடுக்குருத்து வாடிச் சாய்ந்துவிடும். இந்தக் குருத்தை மெதுவாக இழுத்தால் கையோடு வந்துவிடும். சில சமயங்களில் இப் பூச்சியின் தாக்குதல் 86 சதவீதம் வரை இருக்கும்.

சோளம் தண்டுப்புழு:

  • இப் புழு பொதுவாக ஒரு மாதப் பயிரைத் தாக்க ஆரம்பிக்கும்.
  • தாக்கப்பட்ட பயிரில் நடுக்குருத்து வாடி காணப்படும். இலைகளில் வரிசையாக துவாரங்கள் காணப்படுவது இப்புழு தாக்குதலின் அறிகுறி.
  • இதன் தாக்குதல் அறுவடை வரையிலும்கூட காணப்படும். வளர்ந்த பயிரில் இதன் தாக்குதல் இருக்குமானால், அப் பயிர்கள் தங்கள் வீரியத்தை இழந்து, சிறிய பலமில்லாத சரியாக மணிப்பிடிக்காத கதிர்களைக் கொடுக்கும்.

சோளம் கதிர் நாவாய்ப்பூச்சி:

  • இளம் பருவ பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் சோளக் கதிரில் மணிகள் பால் பிடிக்கும் தருணத்தில் சாற்றை உறிஞ்சி உண்பதால், கதிர்கள் சாவியாகி விடுகிறது.
  • இதனால் 15 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சோள மணிகளில் இப் பூச்சிகள் ஏற்படுத்திய சிறு துவாரங்களினால் சோளத்தின் தரம் குறைகிறது.

கதிர் ஈ:

  • இந்தப் பூச்சி பொதுவாக சோளம் பயிரிடப்படுகின்ற எல்லா இடங்களிலும் காணப்படும்.
  • சோளத்தைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இப் பூச்சியின் இளம் புழுக்கள் சோளப் பூக்களைச் சேதப்படுத்துவதால், சோளம் மணிப் பிடிக்காமல் சாவியாகிவிடுகிறது.

அசுவிணி:

  • இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சி உண்ணக் கூடிய தன்மை கொண்டவை. இப் பூச்சிகள் பொதுவாக சோளப் பயிரில் நடுக்குருத்தில் காணப்படும்.
  • மேலும், இலைகளின் அடிப்பாகத்தில், தண்டுப்பகுதி மற்றும் சோளக் கதிர்களிலும்கூட காணப்படும். இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சி உண்ணுவதால், இலைகள் மஞ்சளாக மாறும்.
  • சில நேரங்களில் இலைகளின் ஓரங்கள் கருகிக் காணப்படும். இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சிக் கொண்டே தேன் போன்ற ஒரு திரவப் பொருளை கழிவாக வெளியேற்றுகின்றன.
  • கதிரில் இப் பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவை அறுவடையைப் பாதிக்கும். இந்த அசுவிணி ஒரு வகையான வைரஸ் நோயை பரப்பக் கூடிய தன்மையுடையது.

சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு:

  • ஒரே சமயத்தில் விதைத்தும் மற்றும் முன்பட்டத்தில் விதைப்பதாலும் குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ மற்றும் கதிர் நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்.
  • குருத்து ஈயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ சோள விதைக்கு 4 மிலி குளோரிபைரிபாஸ் அல்லது 4 மிலி பாசலோன் அல்லது 4 மில்லி மானோ குரோட்டோபாஸ் மருந்தையும், 0.5 சதவீதம் கோந்தையும், 20 மிலி நீரில் கரைத்து விதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
  • நேரடி விதைப்பில் 5 கிலோ விதையைப் பயன்படுத்தி, நெருக்கி விதைத்த பின்னர், குருத்து ஈ, தண்டுப்புழு, அடித்தேமல் நோய் தாக்கிய செடிகளைக் களைத்து விடலாம்.
  • ஊடு பயிராக தட்டைப்பயறு அல்லது மொச்சைப் பயிரிடுவதால் தண்டுப்புழு தாக்குதலைக் குறைக்க முடியும். வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி அழிப்பதால், குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.

கைவினை முறைகள்:

  • முட்டைப் புழு, கூட்டுப் புழுக்கள் பாதிக்கப்பட்ட பயிரின் பகுதிகளையும் சேகரித்து அழிப்பதால், பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்காது தடுக்கப்படுகின்றன.
  • கருவாட்டுப் பொறி ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைப்பதால் குருத்து ஈக்கள் கவரப்பட்டு, அழிக்கப்படுகின்றன.
  • ஒரு மாத காலம் இந்தப் பொறியை வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நனைத்த கருவாட்டை வைத்திட வேண்டும்.
  • விளக்குப் பொறி வைப்பதால், தண்டுப்புழுவின் தாய்ப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக் கவர்ச்சி பொறிகள் வைத்து, கதிர் பருவத்தில் தாக்கிடும் பச்சைப் புழுவின் (ஹெலிகோவெர்பா) ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

ரசாயன பூச்சிக் கொல்லிகள்:

  • பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பட்சத்தில் சரியான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
  • குருத்து ஈ: ஒரு செடிக்கு ஒரு முட்டை அல்லது 10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால் மீதைல் டெமட்டான் 200 மிலி அல்லது ரோகார் 200 மிலி இவற்றில் ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • குருத்துப் பூச்சி: 10 சதவீதம் நடுக்குருத்து காய்ந்து காணப்பட்டால், குயினால்பாஸ் குருணை மருந்து ஏக்கருக்கு 6 கிலோ அல்லது போரேட் குருணை மருந்தை 3 கிலோ அல்லது பியூடான் குருணை மருந்து 7 கிலோ. இவற்றில் ஏதேனும் ஒன்றை 20 கிலோ மண்ணுடன் கலந்து, நடுக்குருத்தில் இட்டுக் கட்டுப்படுத்தலாம்.
  • கதிர் ஈ: கதிருக்கு 5 எண்ணமும், கதிர்நாவாய்ப் பூச்சி கதிருக்கு 10 எண்ணமும், கதிர்புழு கதிருக்கு 5 எண்ணமும் இருந்தால் ஏக்கருக்கு கார்பரில் அல்லது மாலத்தியான் அல்லது பாசலோன் தூசு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 கிலோ என்ற அளவில் கதிர்களில் தூவிக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *