சென்னையின் வெள்ளத்திற்கு காரணம் என்ன?

சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல்பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது.

Courtesy: Hindu
பெருக்கெடுத்து ஓடும் அடையாறு Courtesy: Hindu

சென்னையின் அடிப்படை அமைப்பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர். (தென்மேற்கு பருவமழை 400 மி.மீ, வடகிழக்கு பருவமழை 700 மி. மீ) கடந்த 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் பதிவான 2,566 மி.மீ. மழையே சென்னையில் பதிவான அதிகபட்ச மழை. நகரில் 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து 20 மி.மீ. மழை பெய்தாலே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிவிடும். 1943, 76, 85, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் அடை யாறு ஆற்றிலும் 1943, 76 ஆகிய ஆண்டு களில் கூவத்திலும் வெள்ளம் பெருக் கெடுத்திருக்கிறது.

கொளத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும் பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச் சேரி, மாம்பலம் உள்ளிட்ட 36 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Courtesy: DNA
Courtesy: DNA

சென்னையில் ஓடும் ஆறுகள் கொசஸ்தலை, கூவம், அடையாறு. சோளிங்கர் மலையடிவாரத்தில் (கிருஷ்ணாபுரம், நகரி) உற்பத்தியாகும் தண்ணீரும் காவேரிப்பாக்கம் ஏரி வழியாக வெளியேறும் பாலாற்றின் உபரி நீரும் சேர்ந்தது கொசஸ்தலை ஆறு. இதன் உபரி நீர், கேசவரம் அணைக் கட்டுக்கு செல்லும்போது உருவானது கூவம். பொத்தேரி, வல்லக்கோட்டை பகுதிகளின் தண்ணீரானது மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் சேர்ந்து உற்பத்தியாவது அடையாறு. இந்த 3 ஆறுகளும் மேடான மேற்கிலிருந்து பள்ளமான கிழக்கை நோக்கி ஓடி வந்து கடலில் கலக்கின்றன. அப்படி ஓடி வரும் ஆறுகளை நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் மூலம் இணைத்தனர்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஒவ்வொரு ஆற்றிலும் நீர்மட்டத்தை கணக்கிட அளவுகோல்கள் இருந்தன. மழைக் காலங்களில் நீர்மட்டம் உயரும் போது ஏரிகளின் மதகுகள் திறந்து விடப்பட்டன. ஒரு ஆற்றின் தண்ணீர், ஏரிகளின் வழியாக மற்றொரு ஆற்றுக்கு சென்றது. ஏரிகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘வாக்கம்’ என்றும் ஆறுகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘பாக்கம்’ என்றும் அழைக்கப்பட்டன. 2 அல்லது 3 ‘வாக்கம்’களுக்கு இடையே ஒரு ‘பாக்கம்’ இருந்தது. பாக்கங்களை (ஆறுகளை) வாக்கங்கள் (ஏரிகள்) இணைத்தன. சென்னையில் இந்த நீர்வழித் தடத்தை இன்றும் பார்க்கலாம். ஏரிகளாக இருந்த வில்லிவாக்கம், புரசைவாக்கம் பகுதிகளின் தண்ணீர் இப்போதும் நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றில் கலக்கிறது.

இப்படியாக கொசஸ்தலை கொந்தளித்தால் கூவம் கூப்பிட்டுக்கொள்ளும். கூவம் பொங்கினால் அடையாறு அழைத்துக் கொள்ளும் இந்த மூன்றையும் முகத்துவாரங்களில் வாங்கிக்கொண்டது வங்காள விரிகுடா. இந்த நீர்வழித்தட அமைப்பு காரணமாக புயல், வெள்ளங்களின்போது ஊருக்குள் பெரியளவில் வெள்ளம் புகாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த நீர்வழித் தடங்களை எல்லாம் நாம் அழித்துவிட்டோம்.

கோவளம் பூஞ்சேரியில் தொடங்கி முட்டுக்காடு, பள்ளிக்கரணை, பல்லாவரம், பொழிச்சலூர் வரை இருந்த ஏராளமான ஏரிகள், குளங்கள் எல்லாம் இருப்புப் பாதைகளாகவும் நெடுஞ்சாலை களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் மாகாணியம் மலையப்பட்டு வரை இருந்த ஏரிகள், குளங்களைக் கொண்ட நீர்வழித்தடம் நகரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பொத்தேரி முதல் முடிச்சூர், மணிமங்கலம், ஆதனூர் வழியாக அடையாறு வரையிருந்த நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. ரெட்டேரியின் வியாசர்பாடி நீர்வழித்தடத்தில் இருந்த ஏரிகளில் ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. வேப்பேரியின் தண்ணீர் சேத்துப்பட்டு வழியாக எண்ணூர் – கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. அதுவும் இன்று காணாமல்போய்விட்டது.

நந்தனம் தொடங்கி வள்ளுவர் கோட்டம் தாண்டியும் பரந்துவிரிந்திருந் தது பெரிய ஏரி (Long tank). மழைக் காலங்களில் கூவம் பொங்கினால் பெரிய ஏரி வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் தஞ்சமடையும். எதையும் மிச்சம் வைக்காமல் அழித்துவிட்டோம். மேற்குமாம்பலத்தில் அந்த ஏரியின் எச்சமாக இப்போது இருப்பது ‘லேக் வியூ’ சாலை எனப்படும் ஏரிக்கரைச் சாலை மட்டுமே.

நாம் அழித்துவிட்ட நீர்வழிப்பாதை களில் மீண்டும் ஏரிகள், குளங்களை உருவாக்க முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் மீண்டும் ஆறுகளை இணைப்பதே சென்னையின் வெள் ளப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். இதுபற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தயாரித் துள்ளது பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளரான காந்திமதிநாதன் மற்றும் நீரியல் நிபுணர் ஒடிஸா பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழு. சென்னையின் ஆறுகள் ஓடிய ஏரி, குளங்களின் நீர்வழித்தடத்தில் மீண்டும் ஏரிகளை யும் குளங்களையும் வெட்டமுடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் இருக்கும் கால்வாய்களை பயன்படுத்தியும், குழாய்களை அமைத்தும் மீண்டும் அந்த ஆறுகளை இணைக்கலாம் என்கிறது அவர்களது அறிக்கை.

அதன்படி, வாலாஜா அணைக் கட்டு – கோவிந்தவாடி கால்வாய் – காவேரிப்பாக்கம் ஏரி – கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்க லாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய் – கம்பக்கல் வாய்க்கால் – ஸ்ரீபெரும்புதூர் ஏரி – செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாற்றுடனும் பாலாற்றை இணைக்கலாம்.

ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு – கண்டலேறு – பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கதுடன் இணைக் கலாம். கூவத்தை ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு – புது பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம்.

இன்றைய சென்னை திட்டமிடப்படாத நகரம். அவசரகதியில் அசுரனைபோல வளர்ந்து நிற்கிறது அது. ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த ரத்த நாளங்களை நாம் அறுத்து எறிந்துவிட்டோம். அறுக்கப்பட்ட கோபத்தில் நம் மீது பாய்கிறது ஆறு. அதன் ஆவேசத்தை தாங்காமல் வெள்ளத்தில் மிதக்கிறோம். மீண்டும் அவற்றை இணைத்து வைப்பதே கடந்தகால பாவத்துக்கு தேடிக் கொள்ளும் பரிகாரமாக அமையும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *