வறட்சியில் கை கொடுக்கும் ஜே-13 நெல்

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ்நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக்கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூர், திருபுவனம் மற்றும் சோழவந்தான் என்ற இடங்களில் செய்கிறார்கள். சில நேரங்களில் கிணற்றுநீர் சற்று குறைந்துவிடுவதும் உண்டு.

மதுரை விவசாயிகள் துணிவே துணை என்ற நம்பிக்கையில் சோதனையிலும் சாதனை படைக்கும் நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர். மதுரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகுபடி செய்கிறார்கள்.

  • இந்த ரகத்திற்கு செழிப்பைக் கொடுக்க வயலுக்கு கணிசமான அளவு மக்கிய தொழு உரம் இடுகின்றனர்.
  • பயிர் வரிசைகளின் இடைவெளிகளிலும் உயிர் உரங்கள், உலர்ந்த தொழு உரக் கலவைகள் இடப்படுகின்றது.
  • உடனே பயிர் வரிசை இடையில் களையெடுக்கும் கருவிகளை உபயோகிக்கின்றனர். தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட் டால் இந்த ரகம் வறட்சியைத் தாங்கிக் கொள்கிறது.
  • நடவின் சமயம் 10 கிலோ பொடி செய்யப் பட்ட ஜிங்க் சல்பேட்டினை இடுகின்றனர்.
  • நடவு நட்ட 15ம் நாள் யூரியா 25 கிலோ அளவினை 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஒரு இரவு வைக்கப்பட்டு மறுநாள் வயலுக்கு இடப்படுகின்றது.
  • பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்தோடு கலந்து வயலுக்கு இடப்படுகின்றது.
  • விவசாயிகள் செய்யும் பணிகளால் குறிப்பாக பயிருக்கு திறமையாக களை எடுப்பதால் வேர் வளர்ச்சி ஊக்கப்பட்டு பயிர் அதிக அளவில் தூர்கள் பிடிக்கின்றன. தூர்களில் திரட்சியான கதிர்களும் பிடிக்கின்றன.
  • ஜே-13 பயிர் வயலில் 75 நாட்கள் தங்கி இருந்து, பயிர் நாற்றுவிட்ட 100வது நாளில் அறுவடைக்கு வந்துவிடுகின்றது.
  • பயிர் சாகுபடிக்கு ரூ.11,000 லிருந்து 12,000 வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். 32 மூடை மகசூல் எடுக்கின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20,800 இருக்கும். ஏக்கரில் ரூ.10,000 வரை லாபம் எடுக்கின்றனர்.
  • ஜே-13 நெல் மிக சன்னம். இதில் அரிசி வெண்மையாக இருக்கும். இட்லி, தோசை போன்ற பலகாரங்கள் செய்ய மிகவும் ஏற்றதாக உள்ளது. எல்லா வற்றிற்கும் மேலாக பொரி செய்வதற்கு ஏற்ற ஜே-13 நெல்லினை வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர்.
  • இந்த ரகத்தில் கணிசமான அளவு வைக்கோல் கிடைக்கின்றது.
    நமது நாட்டில் கறவை மாடுகள், கன்றுகள், வண்டிகளை இழுக்கும் வண்டிமாடுகள் போன்றவைகள் உள்ளன. இவைகளுக்கு தவிடு, புண்ணாக்கு கொடுத்தாலும் அவைகளின் வயிறு நிரம்ப அதிக அளவு வைக்கோலும் அவசியம். வைக்கோல் பஞ்சு போல் இருக்கும். ஜே-13 ரகத்தில் வைக்கோல் அதிக அளவு கிடைப்பதோடு அதன் விலை மற்ற ரகங்களின் வைக்கோலின் விலையைவிட சற்று அதிகமாகும்.
  • சாகுபடியில் ஒரு சில ரகங்களை குறிப்பிட்ட பட்டத்தில்தான் சுலபமாக சாகுபடி செய்ய முடியும். ஆனால் ஜே-13 ரகத்தை எல்லா பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஆபத்தில் உதவக்கூடிய ஜே-13 ரகம் விவசாயிகளை சோதனை காலங்களில் காப்பாற்றுகின்றது.
  •  100 நாள் ரகம் ஜே-13ம் பல வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் இதை விடாமல் சாகுபடி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.நாகராஜன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *