வெந்தயம் சாகுபடி

கீரையாகவும், விதைகளாகவும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் அளிக்கும் வெந்தயம் சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Courtesy: dinamani
Courtesy: dinamani

 ரகங்கள்: கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1, கோ 2 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

 மண், தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச் சத்து மிகுந்த மணல் பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.

 பருவம்: ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் மாதங்கள் வெந்தய சாகுபடிக்கு உகந்த பருவம்.

 விதையளவு: ஹெக்டேருக்கு 12 கிலோ விதை போதும்.

 விதை நேர்த்தி: ஹெக்டேருக்கு 12 கிலோ விதைக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லம், 50 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 விதைப்பு: நிலத்தை நன்கு உழுதபின்பு 3.5-க்கு 1.5 மீட்டர் அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து கொள்ள வேண்டும். விதைகளை 20-க்கு 15 செமீ இடைவெளியில் விதைக்க வேண்டும். பயிர் முளைக்கும் முன் 700 மிலி ப்ளுகுளோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம்.

 அடியுரம்: ஹெக்டேருக்கு 20 – 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கும் உரங்களை இடவேண்டும்.

 மேலுரம்: விதைத்த 30 நாள்கள் கழித்து மேலுரமாக ஹெக்டேருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கும் ரசாயன உரம் இடவேண்டும்.

 நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதைத் தொடர்ந்து 7 – 10 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

 பின்செய்நேர்த்தி: விதைத்த 20 – 25 நாள்களுக்குப் பிறகு பயிர் களைதல் வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாகப் பயன்படுத்தலாம். தேவையானபோது களையெடுத்தல் வேண்டும்.

 வேரழுகல்: வெந்தயப் பயிரில் வேரழுகல் நோய் தோன்றும்போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். ஹெக்டேருக்கு 50 கிலோ பிண்ணாக்கை நோய் தோன்றும்போது இடவேண்டும்.

 சாம்பல் நோய்: இந்நோய் தோன்றும்போது ஹெக்டேருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது 2 கிராம் நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து இலைமேல் தெளிக்க வேண்டும்.

 அறுவடை: விதைத்த 20 – 25 நாள்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாகப் பயன்படுத்தலாம். 90 – 100 நாள்களில் விதைகள் உருவாகிவிடும். ஹெக்டேருக்கு பசுங்கீரை 4,000 – 5,000 கிலோவும், விதைகள் 500 – 700 கிலோவும் மகசூலாக கிடைக்கும்.

நன்றி: dinamani


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *