பச்சை மிளகாயை தாக்கும் பூச்சிகள்

மிளகாயைத் தாக்கும் பூச்சிகள்

மிளகாயைத் தாக்கும் பூச்சிகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது:

காய் துளைப்பான் பூச்சியால் தாக்கப்பட்ட மிளகாய். (வலது) செஞ்சிலந்தி பூச்சியால் தாக்கப்பட்ட மிளகாய்.
  • மிளகாயை இலைப் பேன், அசுஉணி, செஞ்சிலந்தி ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவைகளை முறையான மருந்துகள் தெளித்தும், பொறிகள் அமைத்தும் கட்டுப்படுத்த முடியும்.

 இலைப்பேன்:

  •  இது இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும்.
  • இப் பூச்சியின் தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும்.
  • அதிகம் இலைப்பேன் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லிட்டர் டைமீட்டோடேட் 30 இ.சி என்ற மருந்தை தெளிக்க வேண்டும்.

அசுஉணி:

  • அசு உணி என்ற பூச்சி சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. செடிகளில் கருப்பாகப் படிந்திருக்கும்.
  • சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும். இந்த பூச்சி தாக்கினால் மொசைக் என்ற நோய் உருவாகும். இதனால் இலைகள் சுருங்கும்.
  • இந் நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில் 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம், அல்லது சோளம் நட வேண்டும்.
  • அதிகம் பூச்சி தாக்குதல் இருந்தால் அசிபேட் 75 எஸ்பி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தெளிக்க வேண்டும்.

செஞ்சிலந்தி:

  • இப் பூச்சி கண்ணுக்குத் தெரியாது. தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இப் பூச்சித் தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும்.
  • இப் பூச்சி தாக்குதலால் உண்டாகும் நோயை முரணை நோய் என்பர். இந் நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும்.
  • இப் பூச்சியைக் கட்டுப்படுத்த டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டை மி.லி. கலந்து ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்து தெளிக்கலாம்.

காய்துளைப்பான் (புரோட்டானிய புழு):

  • இவ் வகை பூச்சிகள் தாக்கினால் மிளகாய் மற்றும் தண்டுகளில் புழுக்கள் துளையிடும்.
  • ஆரம்ப நிலையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அழிக்கலாம்.
  • அதேபோல் ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தும் அழிக்கலாம்.
  • இப் பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும்.
  • டிரைக்கோ கிராமா கைலோனா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  •  புழுக்கள் துளை போட்டுவிட்டால் என்.டி. என்ற பூஞ்சான் மருந்தை ஏக்கருக்கு 250 மி.லி. அளவு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • இவற்றை தெளிக்கும்போது ஒரு கிலோ உப்புகரிக்காத வெல்லம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இந்த மருந்து புதுச்சேரி கே.வி.கே. அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். இதேபோல் பி.டி. என்ற பாக்டீரியா தூளை ஏக்கருக்கு கால் கிலோ அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

  • மிளகாய் செடிக்கு அருகில் உளுத்தஞ்செடி, பாசிப் பயிறு செடி நட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *