வாழையில் வாடல்நோய்

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் வாடல்நோய் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

  • இந்த நோயின் அறிகுறிகளை வாழையின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காணலாம்.
  •  ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும்.
  • நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
  • பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.
  • பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.
  • தண்டின் நீளவாக்கில் அடியிலிருந்து வெடிப்புகள் காணப்படும்.
  • சில நேரங்களில் மரம் இறப்பதற்கு முன்னால் நிறைய பக்க கன்றுகள் தோன்றும்.
  • பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட வாழை மரத்தில் தார்கள் வருவதில்லை. அப்படியே தார் வந்தாலும் காய்கள் மிகவும் சிறுத்தும், குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும்.
  • இக்காய்கள் ஒரே சீராக பழுப்பதில்லை, சதைப் பகுதியும் ருசி இல்லாமல் அமிலச் சுவையாக இருக்கும்.
  • அடிக் கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் அதில் நீர் மற்றும் சத்துக்களை கடத்தக்கூடிய சாற்றுக் குழாய்த் தொகுப்பு, மஞ்சள் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படும்.
  • நீண்டநாள்களுக்கு பிறகு இந்த நோய் பாதிக்கப்பட்ட மரம் அழுகி, வெட்டப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வீசும்.
  •  இந்த வாடல்நோய் பியூசேரியம் என்று அழைக்கப்படும் ஒருவித பூஞ்சாணமானது ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சாணம் பலவித வித்துக்களை உற்பத்தி செய்து அவை மண்ணில் சுமார் 30 ஆண்டுகள் வாழக்கூடியது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம்.
  • எங்கெல்லாம் இந்த நோயின் தாக்குதல் இருக்கிறதோ, அந்தநிலங்களில் மாற்று ரகங்களான பூவன், பொபஸ்டா, செவ்வாழை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
  • நோய் பாதிக்கப்பட்ட கிழங்கு அல்லது கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடங்களுக்கு கொண்டு சென்று நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • கன்றுகளை வாழைத் தோட்டத்திலிருந்து எடுத்தபின் கன்றுகளின் கிழங்குகளின் மேல்தோல் மற்றும் வேர்களை நீக்கி பின் அக்கிழங்கை 0.2 சதவிகிதம் கார்பெண்டாசிம் (ஒரு லிட்டர் நீரில் 2 கிராம்) மற்றும் மோனோகுரோட்டாபாஸ் (ஒரு லிட்டர் நீரில் 14 மில்லி) மருந்துக் கலவையில் 30 நிமிடம் மூழ்க வைத்து பின் நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும்.
  •  நடவு செய்த உடன் கிழங்கை சுற்றி 20 கிராம் டிரைகோடெர்மா விரிடி மற்றும் 20 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரெசென்ஸ் ஆகிய எதிர் உயிர்க் கொல்லிகளை அரை கிலோ மண்புழு உரத்துடன் கலந்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இந்த முறையை கன்று நட்ட 2, 4 மற்றும் 6-வது மாதங்களில் மீண்டும் செய்ய வேண்டும்.
  • ஓரிரண்டு வாழைகளில் நோயின் அறிகுறி தென்பட்டதும் அனைத்து வாழை மரத்துக்கும் தலா 2 லிட்டர் மருந்து கலவை வீதம் மரத்தைச் சுற்றி ஊற்றி பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்

இவ்வாறு பாப்பாக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் நா. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *