தக்காளி விலை வீழ்ச்சி: எப்படி தடுப்பது?

நம் விவசாயிகளுக்கு இப்போதுவரை ஒரு விளைபொருளின் தேவை எவ்வளவு? நடப்புப் பருவத்தில் எத்தனை ஏக்கரில் ஒரு பயிர் பயிரிடப்பட்டிருக்கிறது? நாமும் அதைப் பயிரிட்டால் நல்ல விலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது போன்ற அடிப்படைத் தகவல்கள் எதுவுமே தெரியாது.

இதன் காரணமாகத்தான், ஒரே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு விளைபொருளை அதிகமாகச் சாகுபடி செய்துவிட்டு, விளைச்சலுக்குப் பின் விலை கிடைக்காமல் நஷ்டப்படுகிறார்கள். இதற்குச் சமீபத்திய உதாரணம் தக்காளி. இன்னொருபுறம் சில பயிர்களின் உற்பத்தி குறைந்து, அடிக்கடி விலை உயர்ந்து நுகர்வோர் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வெங்காயம், பருப்பு வகைகள். தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

முன்னோடி முயற்சி

தமிழகத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர்கள் குழு ஒன்று 14 வருட முயற்சியின் மூலம் தரம், உற்பத்தி, நிகர லாபத்தை அதிகரித்தல், விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்கும் ஒரு புது இணையத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல் விற்பனை வரையிலான அனைத்துச் செயல்பாடுகளையும் இவர்களுடைய ஐ.டி. ரூரல் மாதிரியில் குறு, சிறு விவசாயிகளும் செய்துகொள்ள முடியும்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா ஒன்றியத்தில் 30 கிராமங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த முதலில் அம்மாநில அரசு வாய்ப்பு வழங்கியது. விவசாயிகளின் முழு ஈடுபாட்டுடன் இரண்டரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் அனைத்துக் குறிக்கோள்களும் வெற்றிகரமாக எட்டப்பட்டன. இத்திட்டத்தை கடப்பா மாவட்டம் முழுவதும் ஆயிரம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தும் மத்திய அரசின் சிறப்பு விவசாயத் திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய – மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டுக்குழு, ‘இத்திட்டம் இந்திய விவசாயத்தில் புது அணுகுமுறை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்’ என்ற பாட்டோடு ஒப்புதலையும் அளித்தது. துரதிர்ஷ்டவசமாக ஆந்திரத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் இத்திட்டத்தை விரிவாக்க முடியாமல் போனது.

‘‘விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்புன்னு பேசுற அதேநேரத்துல, தினம் தினம் விவசாயிகள் தற்கொலை பத்தியும், உணவுப்பொருட்களின் விலை உயர்வு – வீழ்ச்சி குறித்தும் படிக்கிறோம், வருத்தப்படுகிறோம், விவாதிக்கிறோம். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம், விவசாயிகளுக்குச் சரியான வழிகாட்டுதல் மற்றும் ஒட்டுமொத்த விவசாய மேலாண்மையை மேற்கொள்ள உதவும் அமைப்பு இல்லாததுதான். எங்க ஐ.சி.டி. (ICT) திட்டம் இதற்கான தீர்வாக அமையும்” என்கிறார் இத்திட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம். இத்திட்டம் பற்றி மேலும் அவர் பகிர்ந்துகொண்டது:

ஏன் வருகிறது விலை வீழ்ச்சி?

“எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கத்துல ஆலம்பட்டு கிராமம். கடந்த 1996-ம் வருஷம் மதுரை பல்கலைக்கழகத்துல எம்.சி.ஏ. முடிச்சேன். சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இணையத் தொழில்நுட்பத்தின் தன்மையைப் புரிந்துகொண்ட, ஒரே மாதிரிச் சிந்தனை உடைய நண்பர்களுடன் சேர்ந்து getbusticket.com-னு ஒரு வலைதளத்தை உருவாக்கினோம்.

அதன் வழியா ஆன்லைனில் பஸ் டிக்கெட் எடுத்துக்கலாம். இது சார்ந்த முயற்சியில ஈடுபட்டிருந்தப்ப ஆந்திராவில் மதனப்பள்ளி பகுதியில விலைவீழ்ச்சி காரணமா விவசாயிகள் தக்காளியை ரோட்டில் கொட்டும் அவல நிலைங்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது. நாலைந்து மாதம் கஷ்டப்பட்டு விளைவிச்சு நல்ல விலை கிடைக்கும் என்ற கனவில் சந்தைக்குக் கொண்டுபோற விவசாயிக்கு, அதிகப்படியான வரத்து காரணமா விலை வீழ்ந்து பொருளை ரோட்ல கொட்டுறப்ப இருக்கும் மனநிலை, கற்பனை செய்து பார்க்க முடியாதது.

இதற்கு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சோம். எங்க துறையின் அடிப்படையே பகுத்தாராய்தல்தான். இந்தப் பிரச்சினையை அலசினதுல அடிப்படையா தெரிஞ்சுகிட்ட விஷயம் ‘தேவைக்கு அதிகமா உற்பத்தி செய்தல்’. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் தன்மையை, பலத்தை உணர்ந்த நாங்கள் விவசாயப் பிரச்சினைக்கு அதன் மூலம் தீர்வு காண முடியும்னு நம்பினோம்.

எப்படிச் செயல்படுகிறது?

அப்படிதான் எங்க ஐ.சி.டி. புராஜெக்ட் உருவாச்சு. ஒரு தக்காளியைப் பத்தின செய்தி எங்க வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்திடுச்சு. விவசாயம் சார்ந்த பல்வேறு துறை வல்லுநர்களோடு ஆலோசித்து முழுமையான, நிலையான, எளிதில் விரிவாக்கம் பண்ணும் வகையில் இந்த மாதிரித் திட்டத்தை உருவாக்கினோம். இத்திட்டம் அரசு – தனியார் இணைந்து செயல்படும்படியாக இருப்பதால், இதை ஆரம்பிப்பதற்கும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கும் எத்தனை நாள் ஆகும் என்று சொல்லமுடியாது. அதனால் நான் முழுநேரமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தொடர்வது என்றும், மற்ற நண்பர்கள் மீண்டும் வேலைக்குச் சென்று திட்டச் செயல்பாட்டுக்கான செலவை வழங்குவது என்றும் முடிவெடுத்தோம். இப்போவரை, எங்க முயற்சி அப்படிதான் போயிட்டு இருக்கு’’ என்கிறார்.

இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். அங்கே இணைய வசதியோடு ஒரு கணினி, அதை இயக்க ஒரு பட்டதாரி, பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட குழு தேவை. இதன்மூலம் வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கெனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற தகவல்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்புப் பரிந்துரைகள் போன்ற தகவல்களையும் பெற முடியும். விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை, அதற்கான பணத்தை மையத்தில் செலுத்திக் குறிப்பிட்ட நாளில் சொந்த இடத்துக்கே வரவழைத்துக்கொள்ளும் வசதி, தனது ஊரில் வேலை ஆட்கள், இயந்திரங்கள் கிடைக்காதபட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து பெறும் வசதி, இதற்கெல்லாம் மேலாக அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விவரங்களை அறிவது, நேரடியாகக் கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வது போன்ற முக்கியமான விவசாயத் தொழில் மேம்பாடுகளைச் செய்துதர முடியும்.

ஒத்துழைப்பு அவசியம்

இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், டென்ஷன் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கைத் தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்ப்புறத்துக்கு அவர்கள் இடம்பெயர வேண்டியதில்லை. அன்றைய நாளில் பயிரிடப்பட்ட பயிர்களின் நிலப்பரப்பு, தட்பவெப்பம் போன்ற புள்ளிவிபரங்கள் உடனுக்குடன் இணையத் தகவல்களாகப் பதிவு செய்யப்படுவதால் நாட்டின் உணவுத் தரம், பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விஷயங்களை அரசும் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

பயிர்க் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். இதன்மூலம் பயிர்க்கடன், காப்பீடுகளை விரிவாக்கம் செய்து சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கலாம். கிராமப் பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

‘‘இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு ரொம்ப அத்தியாவசியம். விவசாய துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. விவசாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு தயாராகவே உள்ளது. அரசோட ஒத்துழைப்புதான் முக்கியம். அத்துடன் இதில் ஆர்வமுள்ள மற்றவர்களும் கைகோக்கும்போது, விரைவில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன்’’ என்கிறார் திருச்செல்வம் நம்பிக்கையுடன்.

திருச்செல்வம், தொடர்புக்கு: 09840374266

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *