"இயற்கையை இழந்தால் வாழ்வில்லை'

“”இயற்கையை அழிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டால், மனிதன் வாழவே முடி யாது,” என்று “குறிஞ்சி’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கோவை சதாசிவம் பேசினார்.

அவிநாசியில் செயல்படும் “ஈரம்’ சமூக நல இயக்கம் சார்பில், வன விலங்கு வார விழா, துவக்கப்பள்ளியில் நடந்தது. “ஈரம்’ அமைப்பின் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.

“குறிஞ்சி’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கோவை சதாசிவம் பேசியதாவது:வன விலங்கு வாரம் உள்ளதை பலரும் மறந்து விட்டனர். இயற்கையை தொடர்ந்து நாசப்படுத் தினால், நமக்கு தேவைப்படும் காற்றும், நீரும் மாசடைந்து மனிதன் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

நமக்கு தண்ணீரை கொடுத்து வரும் சோலைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இது, மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

சிறிய கரையான் பூச்சி, புற்களை தொடர்ந்து பூமிக்குள் புதைத்து வைத்துக் கொண்டு, அதை வளரச் செய்கிறது. கரையானே அந்த வேலையை செய்யும்போது, மனிதர்கள் ஏன் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கக் கூடாது.

ரசாயன உரங்களை தாவரங்களுக்கு தொடர்ந்து அடித்ததன் விளைவாக, உணவு பொருட்களில் நஞ்சு ஏற்பட்டு விட்டது. இயற்கையான விவசாயம் மட்டுமே மனித குலத்துக்கு நல்லது.

இந்தியாவிலுள்ள 60 லட்சம் மொபைல்போன் டவர் மூலம் பல பறவையினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

குறிப்பாக, தேன் பூச்சிகள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருவது மிகவும் வருத்தமான விஷயம்.

450 மில்லி தேனை சேகரிக்க, 5,000 தேன் பூச்சிகள், 65 ஆயிரம் சதுர கி.மீ., பறந்து, 20 லட்சம் பூக்களில் தேனை சேகரிக்கின்றன. அப்போதே மகரந்த சேர்க்கையும் நடப்பதால், பசுமை படர்கிறது.

மொபைல்போன் டவர்களின் மின் காந்த அதிர்வலைகளால், தேன் பூச்சிகள் தொடர்ந்து மடிகின்றன. ஒரு காலத்தில் மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்களே இருக்காது என்ற நிலை ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானி கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, இயற்கையை நேசிக்க அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; வன விலங்குகளை, அவர்களது வீடான காட்டில் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.இவ்வாறு, கோவை சதாசிவம் பேசினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *