பாலுார் அருகே, அதிக லாபம் தரும் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுார் ஊராட்சியில், மேலச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகள் அதிகம் வசிப்பதால், இப்பகுதியின் பிரதான தொழிலாக, விவசாயம் விளங்கி வருகிறது, இப்பகுதியில், உள்ள விவசாயிகள் அதிக லாபம் தரும், மலர் சாகுபடி செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மேலச்சேரியை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி கூறியதாவது:
- மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், எனக்கு சொந்தமான, 40 சென்ட் நிலத்தில், சாமந்தி பூ செடிகளை பயிரிட்டுள்ளேன்.
- இதற்காக, நிலத்தை நன்கு உழுது, 5 டன் தொழு உரம் ஈடவேண்டும்.
- பின்னர், நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
- நாற்று விடுவதற்கான, சாமந்தி பூ விதைகளை, பெங்களூர் பகுதியில் இருந்து வாங்கி வருகின்றோம். ஒருவிதை, 1.60 பைசாவிற்கு வாங்குகின்றோம்.
- சிலர், நாற்றுகளை வாங்கியும் நடவு செய்கின்றனர். ஒருநாற்று, 2.60 பைசாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
- ஏக்கருக்கு, 3,000 நாற்றுகளை நடவு செய்யலாம்.
- நாற்று நடவு செய்த பின், வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
- நடவு செய்த 40 நாட்களில், அரும்புகள் எடுக்கும்.
- பின்னர், 2 நாட்களுக்கு ஒருமுறை 60 கிலோ முதல் 80 கிலோ வரையிலான சாமந்தி பூக்களை அறுவடை செய்யலாம்.
- வாரம் ஒருமுறை, களை எடுக்க வேண்டும். இதற்காக, 2,000 ரூபாய் செலவாகும்.
- வெயில் நாட்களில், செடிகளில் அரும்புகள் அதிகமாக காணப்படும்.
- அறுவடை செய்யப்படும் பூக்களை, ஒருகிலோ 20 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.
- திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும்.மேலும், அனைத்து செலவுகளும் போக, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்