திசு வாழை சாகுபடி

விருத்தாசலம் பகுதியில் திசு வளர்ப்பு வாழையான கிராண்ட் நைன் ரக வாழையை சாகுபடி செய்து நல்ல லாபம் கிடைப்பதாக இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தற்போது திசு வளர்ப்பு வாழைக்கன்றான ஜி9 வாழைப்பழம் பார்வைக்கு கவர்ச்சியாக இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கிராண்ட் நைன் எனப்படும் ஜி9 வாழை விற்பனைக்கு வருகிறது.இதைப் பார்த்த விருத்தாசலத்தை அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ப.வேல்முருகன், தானும் இந்த வாழையை சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஜி9 வாழையை நடவு செய்துள்ளார்.

இது குறித்து ப.வேல்முருகன் தெரிவித்தது:

  • பொதுவாக திசு வளர்ப்பு வாழையை நடும்போது அந்தந்தப் பருவ சூழலுக்கு ஏற்ப நடவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் விருத்தாசலம் பகுதியில் ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.
  • கன்றுகளை ஜனவரி முதல் மே மாதம் வரையிலான மாதங்களில் நடவு செய்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த் தாக்குதல் அதிகம் இருப்பதுடன் செடியின் வளர்ச்சியும் குறைந்து சில நேரங்களில் குலை தள்ளிவிடும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர். அதன்படி ஆகஸ்ட், செம்டம்பர் மாதங்களில் நான் நடவு செய்தேன்.
  • நிலத்தை சமப்படுத்தி தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனைப்படி 6 அடி இடைவெளியில் 1 ஏக்கருக்கு 1000 கன்றுகளை நடவு செய்தேன்.
  • நடவு செய்தது முதல் 5 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வந்தேன். 1 ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டும், 30 நாளுக்கு ஒரு முறை களை எடுத்து வந்தேன்.தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் வாழைத்தார் உள்ளது.
  • விருத்தாசலம் பகுதியில் இந்த ஜி9 வாழைத்தார் ஒன்று ரூ.300 முதல் ரூ.600 வரையில் விற்பனையாகிறது. களை எடுத்தல், முட்டுக்குச்சிகள், தொழு உரம், உரம் உள்ளிட்டவைகளின் செலவு போக நல்ல லாபம் கிடைக்கும் வகையில் இருக்கிறது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட தானே புயலின்போது 3 மாத கன்றுகளாக இருந்த வாழை மண்ணில் சாய்ந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும் சாய்ந்த கன்றுகளுக்கு மண் அணைத்ததால் அவை நன்றாக வளர்ந்துள்ளன.
  • எனவே, நல்ல லாபம் தரக்கூடியதாகவும், விற்பனை செய்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து வேளாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தது:

  • வாழை பயிரிட விரும்புவோர் நல்ல வடிகால் வசதியுள்ள அமில காரத் தன்மை 5.5-7.5 வரையுள்ள மண்ணைத் தேர்வு செய்யலாம்.
  • காரத்தன்மை அதிகமாகவும் உப்பு கலந்த களிமண்ணானது வாழை நடவு செய்ய ஏற்றதல்ல. ஏனெனனில், இத்தகைய மண்ணில் நுண்ணூட்டச் சத்தும், மணிச்சத்தும் வாழைக்கு எளிதில் கிடைக்காது.
  • திசு வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யும்போது 5 முதல் 6 இலைகள் கொண்ட நன்கு வளர்ந்த தரமான செடிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • வாழைக் கன்றுகள் நடும் வயலை உளிக்கலப்பை மூலம் ஒரு முறையும், சட்டிக்கலப்பையின் மூலம் ஒரு முறையும் உழவு செய்த பின்னர் கொக்கிக் கலப்பையால் 2 முறை உழவு செய்ய வேண்டும்.
  • நடவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே 1.5ஷ்1.5ஷ்1.5 அடி அளவுள்ள குழிகளை 6-க்கு 6 அடி அல்லது 5-க்கு 7 அடி இடைவெளியில் எடுக்க வேண்டும்.குழிக்கு 5 கிலோ அளவுக்கு தொழு உரத்தை மேல் மண்ணுடன் கலந்து குழியில் இட வேண்டும்.
  • மேலும், வேப்பம் புண்ணாக்கு 500 கிராம், பியூரடான் 20 கிராம் இட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஹெக்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் வாழைக்கன்றுகள் தேவை.
  • இவ்வாறு நடவு செய்த வாழைக்கன்றுகளுக்கு நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வாழை ஒன்றுக்கு நாள்தோறும் 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
  • நீரில் எளிதில் கரையும் உரங்களை ஒரு வாழைக்கு 200 முதல் 300 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து என்ற விதத்தில் கரையும் உரப்பாசனம் மூலம் 5 நாள் இடைவெளியில் இடவேண்டும்.
  • வாழைக் கன்றில் நூல்புழுத் தாக்குதலின் அறிகுறி தெரிந்தால் மீண்டும் வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கை ஒரு மரத்துக்கு 500 கிராம் வீதம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
  • அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா இரண்டையும் 20 கிராம் அளவில் தொழு உரத்துடன் கலந்து மரம் ஒன்றுக்கு இடவேண்டும். இவ்வாறு செய்தால் கன்றுக்கு ஊட்டச்சத்து சிறப்பாக அமையும்.
  • பாக்டீரியா நோய்த் தாக்குதலிலிருந்து கன்றுகளைக் காப்பாற்ற செடிக்கு 25 கிராம் சூடோமோனாஸ் வைக்கலாம்.
  • வாழைக்குலையின் கடைசி சீப்பு வந்தவுடன் 1 வாரத்துக்குள் ஆண் பூவை நீக்கிவிட்டு சவுக்கு அல்லது யூகலிப்டஸ் குச்சிகளை முட்டுக் கொடுக்க வேண்டும்.
  • கடைசி சீப்பு வெளிவந்தவுடன் ஒளி ஊடுருவும் பாலித்தீன் பை கொண்டு வாழைக்குலைகளை மூடவேண்டும். பாலித்தீன் பைகளில் குளிர்காலமாக இருப்பின் 2 சதவீதம் துளைகளையும், கோடைகாலத்தில் 4 சதவீதத் துளைகளையும் ஏற்படுத்தி காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
  • இதன்மூலம் பழங்கள் நல்ல ஏற்றுமதித் தரத்துடன் சிறப்பாகக் காணப்படும். நன்கு பராமரிக்கப்பட்ட ஜி9 வாழை நடவு செய்த 11 மாதங்களில் முதல் அறுவடையும், முதல் அடிக்கன்றிலிருந்து வரும் குலைகள் 10 மாதத்திலும், 2-ம் அடிக்கன்றிலிருந்து வரும் குலை 9 மாதத்திலும் வரும் என தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “திசு வாழை சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *