`சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்!’ – பசுமை இல்லம்!

உலகம் வெப்பம் ஆவதில் ஸ்மெண்ட்க்கு பெரிய பங்கு உள்ளது. சீமென்ட் செய்வதற்கு அதிகம் வெப்பம் தேவை.
இதற்கு அதிகம் நிலக்கரி அல்லது காஸ் உபயோகிக்க படுகிறது. அதே போல் TMT இரும்பு பார்களும் அதிகம் உலகம் வெப்பம் ஆவதற்கு காரணம் ஆகின்றன.
இவை எல்லாம் 70 ஆண்டுகள் முன்பு வீடுகள் கட்ட உபயோகிகம் படுத்தவே இல்லை. சீமென்ட், இரும்பு உபயோகத்தை குறைத்து உருவாக்க பட்ட ஒரு பசுமை இல்லம் பற்றிய செய்தி இதோ…

இந்தப் பசுமை இல்லத்தின்(டிவைன் இல்லம்) மூலமாக, வெப்பத்தை குறைத்திருக்கிறோம். எங்கப் பகுதிகளில் கிடைத்த பொருள்களைக் கொண்டே, மரபுவீடாக அமைத்திருக்கிறோம். வீட்டுக்குள் 60 சதவிகிதம் வரை இயற்கையான ஒளி வரும்படி செய்திருக்கிறோம்.

கட்டடக்கலை சம்பந்தப்பட்ட படிப்பை முடித்து கல்லூரியில் பணிபுரிந்து வரும் இளம் தம்பதி ஒன்று, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டும், அதிகம் சிமென்ட் கலக்காமல் தயாரிக்கப்பட்ட சுடாத கற்களைக் கொண்டும், சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் நான்கு இடங்களில் விழும்படியும் மரபு வீட்டை அமைத்து, அதிகம் வெப்பத்தை ஏற்படுத்தாத அந்தப் பசுமை இல்லத்தில் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.

பசுமை இல்லம்

பசுமை இல்லம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் இருக்கிறது களத்துப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்வின் இமானுயேல். இவர் மனைவி ஒபிலியா வினோதினி.

இருவரும் கட்டடக் கலை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பை முடித்துவிட்டு, தற்போது, பிஹெச்.டி படித்து வருகிறார்கள். இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்கள். களத்துப்பட்டியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில், தென்னை மரங்கள், பழமரங்கள் புடைசூழ, நடுவில் ‘டிவைன் கட்டடக்கலை’ முறையில் பசுமை இல்லத்தை அமைத்திருக்கிறார்கள்.

 காட்வின் இமானுயேல், ஒபிலியா வினோதினி தம்பதி

காட்வின் இமானுயேல், ஒபிலியா வினோதினி தம்பதி

இதுகுறித்து, காட்வின் இமானுயேலுவிடம் பேசினோம்.

“எங்களுக்குச் சொந்த ஊர், மணப்பாறை பக்கமுள்ள கொத்தமேட்டுப்பட்டி. அப்பா ஆசிரியரா இருந்தார். அவர், இந்தக் களத்துப்பட்டியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை, 1991-ம் ஆண்டு வாங்கினார். அதில் போர்வெல் அமைத்து நெல், கடலை, காய்கறிகள்னு விளைவிச்சார். நான், 2003-ல் கட்டடக்கலை இளங்கலைப் படிப்பை படிச்சு முடிச்சேன். அதன்பிறகு, பெங்களூர், மும்பைனு வேலை பார்த்தேன். அதன்பிறகு, சென்னையில் முதுநிலை கட்டடக்கலை படிச்சேன்.

அப்போதான், 2009-ம் வருடம் என் கூட படிச்ச ஒபிலியா வினோதினியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 2010-ம் வருடம் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு பேரும் வேலையில் சேர்ந்தோம். சொந்த ஊர்ல உள்ள வீட்டுல பாதியை நெடுஞ்சாலைத்துறையினர் விரிவாக்கத்துக்கு இடிச்சாங்க. அதனால், களத்துப்பட்டியில் உள்ள இந்த இடத்தில் வீடுகட்டி, வாழ முடிவெடுத்தோம். நாங்க கட்டடக் கலை படிச்சதாலும், அதன்மேல் இருந்த காதலாலும், இயற்கைக்கு ஊறு செய்யாத, அதிகம் வெப்பத்தை வெளிப்படுத்தாத பசுமை இல்லத்தை அமைக்க முடிவெடுத்தோம். பாண்டிச்சேரி ஆரோவில் போய் அதற்கான பயிற்சியை எடுத்துக்கிட்டோம்.

வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி

வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி

2012-ல் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினோம். பவுண்டேஷனுக்கு இந்தப் பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் அரளைக் கற்களை எடுத்து பயன்படுத்தினோம். கட்டடம் எழுப்ப 93 சதவிகிதம் செம்மண், வெறும் 7 சதவிகிதம் சிமென்ட் கலந்த கலவைக் கொண்டு செய்யப்பட்ட சுடாத கம்ப்ரஸ்டு எர்த் பிளாக் என்ற கற்களை உருவாக்கி, பயன்படுத்தினோம். சுவர்களுக்கு பூச்சு பூசலை. ஆனால், பாயின்டிங் மட்டும் பண்ணினோம். ஒவ்வொரு கல்லுக்கும் மேலும் பயன்படுத்த செம்மண் சாந்தை பயன்படுத்தினோம்.

7 அடி வரை சுவரை எழுப்பியபின், உறுதித்தன்மைக்காக அடுத்து கான்ங்க்ரீட் பீம் அமைத்தோம். அதன்மீது, மறுபடியும் மூன்று அடி வரை கம்ப்ரஸ்டு எர்த் பிளாக்கால் சுவர் எழுப்பினோம். சுவர்களுக்கு மேல் அமைக்கப்படும் சீலிங்கின் கணத்தைக் குறைப்பதற்காக, ஃபில்லர் ஸ்லாப் ப்ரூஃபிங் டெக்னிக்கை பயன்படுத்தினோம். சிமென்ட் கான்கிரீட் மூலமாக அதிமான வெப்பம் உள்ளே வரும். இதற்கு மாற்றாக வெப்பத்தைக் குறைக்கத்தான் கேரளாவில் கிடைக்கும் குருடி பிளாக்கை கொண்டு சீலிங் அமைத்தோம். இதன்மூலம், வழக்கமான கான்ங்கிரீட் சீலீங்கைவிட, இரண்டு டிகிரி வரைக்கும் குறைவான வெப்பம் உள்ளே வரும்.

 தோட்டம்

தோட்டம்

அதேபோல், தரைக்கு வெறும் கைகளால் செய்யப்படுகிற ஆத்தங்குடி டைல்ஸை பயன்படுத்தினோம். தேக்குல ஜன்னலை படுக்கைவசத்தில், இயற்கையான சூரிய ஒளி உள்ளே வர்றமாதிரி அமைத்தோம். வேஸ்ட் மெட்டிரியலை வைத்து கதவுகளை அமைத்தோம். ஒரு ஹால், ஒரு கிச்சன், 2 பெட்ரூம்கள், 2 டாய்லெட்டுகள்னு இந்த வீட்டுல அமைத்தோம். வீட்டுக்குள் பகலில் சூரியன், இரவில் நிலா வெளிச்சமும் வந்து, இயற்கை ஒளியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஹாலில் இரண்டு இடத்திலும், இரண்டு டாய்லெட்டுகளிலும் சீலிங்கில் கேப் விட்டோம். அந்த கேப்புகளில் தடிமனான டப்பன்ட் கிளாஸை பொருத்தினோம்.

அதன்மூலமாக, சூரியன் மற்றும் நிலா ஒளி வீட்டுக்குள் வரும். அந்த இயற்கை ஒளி வரும் இடத்தில்தான் டைனிங் டேபிளை வைத்திருக்கிறோம். டாய்லெட்டுகளில் டப்பன்ட் கிளாஸ் வழியாக சூரிய வெளிச்சம் வருவதால், டாய்லெட்டுகள் ஈரமாக இல்லாமல் காய்ந்துபோய்விடும். இந்த வீட்டை அமைக்க, 25 லட்ச ரூபாய் வரை செலவாச்சு. உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, ஒருதுளி பெயின்டை கூட அடிக்கவில்லை. அந்தந்தப் பொருள்களின் இயல்பு நிறத்திலேயே இருக்கும்படி விட்டுவிட்டோம். எல்லாவற்றைவிட, இந்த வீட்டுக்காக தோப்பில் உள்ள ஒரு உயிரான மரத்தைகூட வெட்டவில்லை. காம்பவுண்ட் சுவர் அமைக்கலை. மாற்றாக, உயிர்வேலி அமைத்திருக்கிறோம்.

வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி

வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி

வீட்டின் ஒரு அங்கமாக கிச்சன் கார்டனும் இயற்கை முறையில் அமைத்திருக்கிறோம். 10 வருடமாக இயற்கையாக விளைந்த உணவுப்பொருள்களைதான் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இந்தப் பசுமை இல்லத்தின் (டிவைன் இல்லம்) மூலமாக, வெப்பத்தை குறைத்திருக்கிறோம். எங்கப் பகுதிகளில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டே, மரபுவீடாக அமைத்திருக்கிறோம். வீட்டுக்குள் 60 சதவிகிதம் வரை இயற்கையான ஒளி வரும்படி செய்திருக்கிறோம். நான், மனைவி, மகன், பெற்றோர் என அனைவரும், ஆனந்தமான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். இதுபோல், பசுமை இல்லம் அமைக்க நினைப்பவர்களுக்கு இலவசமாக ஆலோசனை சொல்ல காத்திருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக!

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “`சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்!’ – பசுமை இல்லம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *