நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும்.

  • இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும்.
  • பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும்.
  • ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி இடைவெளியில் நட்டு சாகுபடி செய்ய வேண்டும்.
  • இதற்கு ஏக்கருக்கு 4450 நாற்றுக்கள் வேண்டும். நாற்று முளைக்காத போக்கிடம் நடுவதற்கு அந்த மாதிரி சூழல் வராது. வந்தால் மொத்தமாக 4600 நாற்றுக்கள் போதுமான தேவையாகும்.
  • கரும்பு நாற்றை வரிசையில் 2அடி இடைவெளி விட்டு நடும்போதே தாய்ப்பயிரோடு பக்கத்தூரும் இரண்டு அல்லது ஒன்று குறுகிய நீளத்தில் வளர்ந்திருக்கும்.
  • வயலில் நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பயிரை பூமிமட்டத்திலிருந்து இரண்டு அங்குலம் விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மேலும் அதிக தூர்கள் வளரும்.
  • இது பக்கத்தூரையும் புழு குருத்தையும் சேதப்படுத்துவதால் நமக்கு கரும்பின் எண்ணிக்கை குறையும். ஆனால் தாய்ப்பயிரை அறுத்துவிடுவதால் மேற்கண்ட செயல்பாடு நடக்காது.
  • இளங்குருத்துப் புழுவால் இயற்கையாக நடப்பது, அறுத்துவிடுவதால் செயற்கையாக இங்கு செய்கிறோம். இயற்கையாக புழுவால் நடப்பது பக்கத்தூரையும் தாக்கி அழிக்கும். அதனால் அது நமக்கு நல்லதில்லை.
  • சில ரக இளங்கரும்புப் பயிரின் தண்டில் முசுமுசு என்று முள்ளு மாதிரி சொணை இருக்கும். அது ஆட்களைக் கொண்டு அறுத்துவிடும்போது கையில் குத்தும். வேலையாட்கள் கீழே குனிந்துதான் அரிவாள் கொண்டு அறுத்துவிட வேண்டும். இந்த இடையூறுகளினால் வேலை ஆட்களின் வேலை பாதிக்கும்.
  • இதைக்கருத்தில் கொண்டு சுலபமாக வேலை நடக்கவும், வேலைஆட்களின் கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்யவும் ஒரு கருவி உருவாக்கப்பட்டது.
  • இக்கருவியை உபயோகிக்கும்போது கீழே குனியவும், தண்டை பிடிக்கவும் வேண்டாம். எந்தப்பயிரை அறுத்துவிட வேண்டுமோ அந்தப் பயிரை கருவியால் நின்றுகொண்டே அறுத்துவிட்டு நடந்துசெல்லலாம்.
  • நாமே காலை வேளை இரண்டு நாட்களில் ஒரு ஏக்கர் பயிரை அறுத்துவிட்டு வேலையை முடிக்கலாம்.
  • அறுத்த பயிரை மாட்டிற்கு தீனமாகக் கொடுக்கலாம். இளம் பயிராக இருப்பதால் மாடும் நன்கு சாப்பிடும்.
  • அதற்குப்பிறகு சொட்டு நீர்ப் பாசனத்தோடு உரக் கலவையையும் பயிருக்கடியில் கொடுக்கும் போது பயிர் சத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பக்கத்தூரை வளரச் செய்யும்.
  • பக்கத் தூர்களின் வயதும் ஏறத்தாழ ஒரே சீராக இருக்கும். அதனால் ஒவ்வொரு தூரும் கரும்பாய் மாறும். கரும்பின் உயரமும் தடிமனும் அதிகரிப்பதால் ஒரு கரும்பின் எடையானது அதிகரிக்கும்.
  • இப்படி ஒவ்வொரு கரும்பின் எடை கூடுவதால் ஒரு குத்தின் எடை அதிகரிக்கும். இதனால் வயலின் இருக்கிற ஒட்டுமொத்த கரும்பின் மகசூல் அதிகரிக்கும்.

தகவல்: முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422661 1310.
கே.சத்தியபிரபா, உடுமலை.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *