திருந்திய நெல் சாகுபடியில் நாற்று நடவு நுட்பங்கள்

திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது குறித்து கோபி வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோபி வட்டார விவசாயிகள் அதிக அளவில் இம்முறையில் நெல் நடவு செய்கின்றனர். திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

  • இள நாற்றை நடுவதால் விரைவில் நிலை கொண்டு, நாற்று விரைந்து வளரும். வேர்களின் வளர்ச்சி அதிகமாகிறது. அதிக தூர்கள் வெடிக்கின்றன.
  • இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிக்சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது.
  • இம்முறையில் ஒரு ஏக்கருக்கு இரண்டு அல்லது மூன்று கிலோ விதைகளே போதுமானது.
  • நாற்றங்கால், நீர் நிலைக்கும், நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 40 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலம் போதுமானது.
  • உழுது சமன்படுத்தப்பட்ட நிலம் நான்கு அடி அகல பாத்திகளாக ஒன்றரை அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.
  • இரண்டு அங்குலம் ஆழத்துக்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளின் பரவலாக விசிறி சமன் செய்ய வேண்டும்.
  • பாத்திகளின் நீளம் வயல் அமைப்புக்கு ஏற்ப இருக்கலாம்.
  • சிறந்த முறையில் நீர்பாசனம் செய்ய ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.
  • களிமண் விகிதம் அதிகமாக இருந்தால் மணல் கலக்கலாம். அதிக மணல் இருப்பின் சற்று களிமண் கலக்கலாம்.
  • விதையினை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, வடிகட்டி, ஒரு நாள் நிழலில் முளை கட்டிய விதையை சீராக தூவி விட வேண்டும்.
  • நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணை தூவிய பின் நீர் தெளிக்க வேண்டும்.பூ வாளியால் நீர் தெளிப்பது நல்லது.
  • அதிக வெயிலில் இருந்து நாற்றை பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலம் மூடி வைப்பது மிகுந்த பலனை தரும்.
  • ஒரு வாரத்துக்கு பின் நாற்று வளர்ந்துவிட்ட நிலையில் வாய்க்காலில் நீர் நிரப்பும் போது, நீர் நாற்றின் அடிப்பகுதியை நனைத்து தேவையான வளர்ச்சியை தரவல்லதாக அமையும்.
  • ஒரே ஒரு நாற்றை எடுத்து மண்ணின் மேற்பரப்பில் மேலாக நடவு செய்ய வேண்டும். 22.5க்கு 22.5 செ.மீ., நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்ய கயிற்றில் ஒவ்வொரு 10 அங்குலத்துக்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம்.
  • நாற்றுகள் பாத்திகளில் இருந்து பறித்த 30 நிமிடங்களில் நடவு செய்ய வேண்டும்.
  • நாற்றுகளை அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கலவையில் வேரினை 20 நிமிடம் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • மண் மறைய நீர் கட்டுதல் வேண்டும். 10 நாட்களுக்கு தொடர்ந்து செய்தல் வேண்டும். திருந்திய நெல் சாகுபடி மூலம் குறைந்த விதை அளவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *