வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்

வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  • ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகவும் ஏற்ற தருணம். எனவே, விவசாயிகள் வெண்டை சாகுபடி முறைகளைத் தெரிந்து பயிர் செய்தால் அதிக விளைச்சல் பெறலாம்.
  • வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா,பார்பானி கிராந்தி, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்கள் மற்றும் யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வெண்டையை அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார,அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி- மார்ச் மாதங்கள் ஏற்றவை.
  • விதையைப் பொருத்தவரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும் தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் :

  • வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாள்களுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்துவிட வேண்டும்.
  • விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது உன்னதமானது.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம் :

  • அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
  • விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.

இலைவழி உரமளித்தல்:

  • ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30-ம் நாள் முதல் பத்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சத கரைசலை விதைத்த 30, 45 மற்றும் 60 -ம் நாள்களில் என மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம்:

  • காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸ் என்ற உயிர்ப் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்கலாம்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டைப் பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். சாம்பல் நிற வண்டுகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.
  • நூற்புழு தாக்குதல் மண் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக, பிற உரங்களுடன் கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போபியூரான் அல்லது 10 சத போரேட் குருணை மருந்து இடலாம்.
  • அசுவிணியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மிதைல் ஓ டெமட்டான் அல்லது 2 மி.லி. டைமிதியேட் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது வெள்ளை ஈ எனும் பூச்சியால் வெண்டையில் பரவக்கூடிய ஒரு நச்சுயிரி (வைரஸ்) நோய். எனவே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை வயலில் அமைக்கலாம்.
  • கோடைக் காலங்களில் இந்நோய் மிக அதிக அளவில் தாக்குமாதலால் இந் நோயைத் தாங்கி வளரக்கூடிய அர்கா அனாமிகா, யு.எஸ்.9ஏ, ஏ.யு.எஸ்.7902 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
  • சாம்பல் நோய்: நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை:

  • விதைத்த 45-ம் நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம். எனவே, வெண்டை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளைக் கடைப்பிடித்து நிறைவான மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *